பிராட்மேனுக்கு பிறகு இவர்தான் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் – புகழாரம் சூட்டிய சங்கக்காரா! அது ஒரு இந்திய வீரராம்..
முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் டான் பிராட்மேனுக்கு பிறகு, கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக ஆகுவதற்கு அனைத்து தகுதிகளும் இந்திய அணி கேப்டன் விராட்கோலிக்கு உள்ளது என சங்கக்காரா புகழாரம் சூட்டியுள்ளார்.
சமகால கிரிக்கெட் உலகில் மிக சிறந்த பேட்ஸ்மேனாக திகழ்பவர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. ஒருநாள் அரங்கில் அதிவேக 8000, 9000, 10000 ரன்களை அடித்துள்ள இவர், இதுவரை 43 சதங்களை விளாசி அதிக சதங்களை அடித்தவர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளார்.
டெஸ்ட் அரங்கில் 27 சதங்கள் அடித்துள்ள இவர், மொத்தம் 70 சதங்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் பேட்டிங்கில் தனக்கென தனி வரலாறே படைத்து வரும் கோஹ்லியை, முன்னாள் ஆஸ்திரேலிய வீரரும் ஜாம்பவானுமான டான் பிராட்மேன் உடன் ஒப்பிட்டுள்ள, மெரிலிபோன் கிரிக்கெட் கிளப் தலைவரும் முன்னாள் இலங்கை அணி கேப்டனுமான சங்கக்காரா புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட்கோலி குறித்து பேசிய சங்கக்காரா, “விராட்கோலி மிகச்சிறந்த உடல்தகுதி கொண்ட வீரர். போட்டிக்காக அவரின் ஈடுபாடு மற்றும் பங்களிப்பு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. திறமை ரீதியாகவும், மனநிலை ரீதியாகவும் சிறந்த ஒருவராக இருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் டான் பிராட்மேனுக்கு பிறகு, மிகசிறந்த வீரராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இவருக்கு மட்டுமே உண்டு.” என்றார்.
விராட் கோலியை உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் செப்பல் புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது:
“மூன்று வடிவிலான போட்டிகளிலும் இந்திய கேப்டன் விராட் கோலி ரன் குவித்து வரும் விதம் வியப்பூட்டுகிறது. தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான். ஆஸ்திரேலிய வரும் இந்திய அணியில் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு இவர் மிகப்பெரிய சவாலாக இருப்பார்.
இவரை கட்டுப்படுத்தினால், தொடரை கடினமில்லாமல் முடிக்க ஏதுவாக இருக்கும். கடந்த முறை வார்னர் மற்றும் ஸ்மித் இருவரும் அணியில் இல்லை. இம்முறை இருவரும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலம் அளிக்கும்.” என்றார்.