இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, நாளை நடைபெறும் போட்டியில் 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்லை எட்டுவார்.
இந்தியா – இலங்கை அணிகளுக்குகிடையேயான மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் நாளை நடைபெறவுள்ளது. இந்திய போட்டியில் தோனி, 102 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை குவித்த இரண்டாவது விக்கெட் கீப்பர் என்ற பெருமையை பெறுவார். ஏற்கனவே இலங்கை அணி வீரர் சங்ககாரா 10,000 ரன்களை கடந்துள்ளார்.
தோனிக்கு விசாகப்பட்டினம் ராசியான மைதானம். அவருக்கு பிடித்த மைதானமும் கூட. இதனை அவரே தெரிவித்துள்ளார். நான் வாழவிரும்பும் அழகான நகரங்களில் விசாகப்பட்டினமும் ஒன்று. கடற்கரையை ஓட்டிய அழகான நிலப்பரப்பு. எனது மிகப்பெரிய இன்னிங்ஸை இங்கு தான் ஆடினேன் என அவர் தனது ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய அணியின் பங்களாதேஷ் பயணம் தோனிக்கு மோசமானதாக இருந்தது. இந்தப்போட்டியில் தோனி சோபிக்க தவறினார். அதன் பிறகான போட்டிகளிலும் தோனி ஒற்றை இலக்க ரன்களே எடுத்தார். இதனால் அவர் பெரிதும் விமர்சிக்கப்பட்டார். அவரது கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிந்துவிடும் என விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது போட்டி விசாகப்பட்டினத்தில் நடைப்பெற்றது. இந்தப்போட்டியில் அதிரடி ஆட்டக்காரரான ஷேவாக் 46 பந்துகளில் 74 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால் தோனி ஆட வந்தபின் எல்லாம் மாறிவிட்டது தோனி அதிரடியில் மிரட்டினார். பாகிஸ்தான் பந்துவீச்சை துவம்சம் செய்தார். இந்தப்போட்டியில் 123 பந்துகளை சந்தித்த தோனி 148 ரன்களை குவித்தார். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
தோனிக்கு தற்போது அதே போன்ற நிலை ஏற்பட்டுள்ளது. தோனி குறித்து தற்போது பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. முன்னணி வீரர்கள் பலர் தோனி ஓய்வு பெற வேண்டும் என கருத்து தெரிவித்து வந்தனர். தோனி எப்போதும் தன் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு தனது ஆட்டத்தின் மூலம் பதில் சொல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.
இந்தியா- இலங்கைக்கு எதிரான முதல் போட்டில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணியில், இந்திய வீரர்கள் தங்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். இந்தப்போட்டியில் இந்திய அணி 16 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில் களமிறங்கிய தோனி தனி ஆளாக போராடினார். 65 ரன்களை விளாசி அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார். தோனி விசாகப்பட்டினத்தில் அப்படி ஒரு இன்னிங்ஸை மீண்டும் ஆடினால் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதோடு புதிய மைல்கல்லை எட்டுவார்.