ஜூனியர் இந்திய அணியின் கேப்டன் ப்ரித்வி ஷாவிற்கு பரிசு தொகையாக 25 லட்சம் அளிப்பதாக மும்பை கிரிக்கெட் வாரியம் (MCA) அறிவித்துள்ளது. பிப்ரவரி 3ஆம் தேதி அன்று நடைபெற்ற U19 கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதி போட்டியில் ப்ரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அசத்தியது.
ஏற்கனவே, இந்திய வீரர்களுக்கு 30 லட்சம், பயிற்சியாளர் ராகுல் ட்ராவிடுக்கு 50 லட்சம் மற்றும் சக ஊழியர்களுக்கு 20 லட்சமும் பரிசு தொகை அளிப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

விஜய் ஹசாரே டிராபியில் மும்பை அணியுடன் விரைவில் ப்ரித்வி ஷா இணைவார். 18 வயதான ப்ரித்வி ஷாவின் பெயரை முதலில் மும்பை அணியில் இடம் பிடிக்கவில்லை, அதன் பிறகு 16வது வீரராக ப்ரித்வி ஷாவின் பெயரை சேர்த்தார்கள். அவர் மும்பை அணியுடன் பிப்ரவரி 6ஆம் தேதி இணைவார் என்று எதிர்பார்க்க படுகிறது. இதுவரை அவர் 9 முதல் நிலை மற்றும் 6 லிஸ்ட் A கிரிக்கெட்டில் விளையாடி இருக்கிறார்.
உலகக்கோப்பை இறுதி போட்டியில் டெல்லியை சேர்ந்த மஞ்சோட் கல்ரா 101* ரன் அடித்து, 217 ரன் இலக்கை துரத்தி இந்திய அணிக்கு வெற்றி வாங்கி தந்தார். பந்துவீச்சாளர்களை பற்றி சொல்லாமல் இருக்க முடியாது. ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 270 ரன் அடிக்கும் என்று எதிர்பார்த்த போது, 216 ரன்னுக்கு ஆல்-அவுட் செய்தார்கள். அதன் பிறகு இலக்கை அசால்ட்டாக துரத்தி நான்காவது முறை உலகக்கோப்பையை வென்றது இந்தியா.
ஜூனியர் இந்திய அணி 6 வருடம் கழித்து மீண்டும் கோப்பையை வென்றது. கடைசியாக உன்முக்த் சந்த் தலைமையிலான இந்திய அணி 2012ஆம் ஆண்டு U19 உலகக்கோப்பையை வென்றது. அதற்கு முன்பு 2000ஆம் ஆண்டில் கைப் தலைமையிலும், 2008ஆம் ஆண்டு விராட் கோலி தலைமையிலும் இந்திய அணி கோப்பையை வென்றுள்ளது.