2017-ல் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரர்களின் பட்டியலில் இந்தியாவின் யுவேந்திர சாஹல் முதலிடம் பிடித்துள்ளார்.
ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 16 ஓவர்களில் 87 ரன்களுக்குச் சுருண்டது. ஒடிஸா மாநிலம் கட்டாக்கில் புதன்கிழமை இரவு நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இலங்கை 16 ஓவர்களில் 87 ரன்களுக்குச் சுருண்டது. இந்திய தரப்பில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்திய யுவேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதே அதிகபட்ச வெற்றியாகும். முன்னதாக, 2012 உலக கோப்பை டி20 போட்டியில் இங்கிலாந்தை 90 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது அதிகபட்ச வெற்றியாக இருந்தது. அந்தச் சாதனை நேற்றைய வெற்றியால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பிப்ரவரி மாதம் பெங்களூரில் 75 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தைத் தோற்கடித்தது இந்திய அணி. இந்த மூன்று பெரிய வெற்றிகளில் இரண்டில் சாஹலின் பங்களிப்பு மிக அதிகம்.
நேற்று 4 விக்கெட்டுகளை வீழ்த்திய 27 வயது சாஹல், இதே வருடம் இங்கிலாந்துக்கு எதிராக பெங்களூரில் நடந்த டி20 போட்டியில் 25 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அந்தப் போட்டியிலும் அவர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
இதனால் 2017-ல் டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களில் 19 விக்கெட்டுகளுடன் (10 போட்டிகளில்) முதல் இடத்தில் உள்ளார் சாஹல். அடுத்த இடத்தில் 17 விக்கெட்டுகளுடன் ரஷித் கானும் கெஸ்ரிக் வில்லியம்ஸும் உள்ளார்கள்.
அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரையும் ஓரங்கட்ட தேர்வுக்குழுவுக்கு மிகுந்த நம்பிக்கையளிப்பது சாஹலின் பந்துவீச்சுதான். குல்தீப் யாதவ் அவ்வப்போது சொதப்பினாலும் தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசி வருகிறார் சாஹல். இதனால் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல், வாஷிங்டன் சுந்தர் என பலர் மாறினாலும் சாஹலுக்கு மட்டும் இந்திய அணியில் நிரந்தர இடம் கிடைத்துள்ளது.
அஸ்வின், ஜடேஜா இனி வேண்டாம் எனத் தேர்வுக்குழு எண்ணுவதற்கு சாஹலின் வெற்றிக்கு முக்கிய இடமுண்டு. அதேபோல சாஹலுக்கு நல்ல இணையாக உள்ள குல்தீப் யாதவும் தேர்வுக்குழுவின் நம்பிக்கையைப் பெற்று நாளுக்கு நாள் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறார். 2017-ல் இந்திய அணிக்கு ஏற்பட்ட முக்கிய மாற்றங்களில் இதுவும் ஒன்று.

இதுவரை 17 ஒருநாள் போட்டிகளில் இடம்பெற்றுள்ள சாஹல் அதில் 27 விக்கெட்டுகளும் 13 டி20 போட்டிகளில் 22 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். இதனால் 2019 உலகக் கோப்பையில் சாஹல் நிச்சயம் இடம்பெறுவார் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த இக்கட்டான நிலையை அஸ்வின், ஜடேஜா எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள்?