இந்திய அணியில் மீண்டும் இடம் பெறுவதற்காக திட்டம் போட்டு ஆடி வருகிறார் தமிழக வீரர் முரளி விஜய்.
இந்திய டெஸ்ட் அணியில் துவக்க வீரராக களம் இறங்கி வந்த முரளி விஜய் கடந்த ஓராண்டாக அணியில் இடம்பெற மிகவும் போராடி வருகிறார். துவக்க வீரராக இருந்த தவான் மற்றும் கே எல் ராகுல் இருவரும் தொடர்ந்து சொதப்பி வருந்ததால் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மயங்க் அகர்வால் துவக்க வீரராக ஆடி வருகிறார். அவருடன் முதல் முறையாக தென் ஆப்பிரிக்கா எதிரான தொடரில் ரோகித் சர்மா துவக்க வீரராக இறக்கப்பட்டார். தற்சமயம் இந்திய டெஸ்ட் அணியில் நிலையாக துவக்க வீரர்கள் இல்லாத நிலையில், மீண்டும் அணியில் இடம் பெறுவதற்காக முரளிவிஜய் உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காக சிறப்பாக ஆடி வருகிறார்.
நடைபெற்று வரும் விஜய் ஹசாரே தொடரில் ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக சதம் அடித்து தன்னை நிரூபித்திருக்கிறார்.
அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து இதே போல முரளி விஜய் அதிரடியை வெளிப்படுத்தி வந்தால், மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புகள் உண்டு.

ஜம்மு-காஷ்மீர் அணிக்கெதிராக விஜய் ஹசாரே தொடரில் தமிழக அணி மோதியது. முதலில் பேட்டிங் செய்த ஜம்மு-காஷ்மீர் அணி 238 ரன்கள் அடித்தது. இதனை சேஸ் செய்த தமிழக அணிக்கு முரளி விஜய் 131 பந்துகளில் 117 ரன்கள் அடித்தார். இவருடன் ஆடிய அபரஜித் 86 ரன்கள் அடித்தார். இறுதியில், தமிழ்நாடு அணி 8 விக்கெட்டுகள் வித்தியசாத்தில் வென்றது.