150 வருட கிரிக்கெட் வரலாற்றில் யாருமே செய்யாத சாதனை… உலக சாதனை படைத்த பாகிஸ்தான் வீரர் ஷகீல்
இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூலம், பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான ஷகீல் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இலங்கை அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இலங்கையின் கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் நான்கு வீரர்களால் மட்டுமே ஒற்றை இலக்க ரன்களை தாண்ட முடிந்தது. மற்றவர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து வெளியேறினர்.

இதன்பின் முதல் இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணிக்கு அந்த அணியின் ஒரு துவக்க வீரரான இமாம் உல் ஹக் 6 ரன்னில் விக்கெட்டை இழந்து ஏமாற்றம் கொடுத்தாலும், மற்றொரு துவக்க வீரரான அப்துல்லாஹ் சஃபீக் இரட்டை சதம் அடித்து கொடுத்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய சான் மசூத் (51), அடுத்ததாக களத்திற்கு வந்த பாபர் அசாம் (39), அதன்பின் களமிறங்கிய சவூத் ஷகீல் (57), சல்மான் (132*) என அனைத்து வீரர்களும் தங்களது பங்களிப்பை சரியாக செய்து கொடுத்து வருவதன் மூலம் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 563 ரன்கள் குவித்துள்ள பாகிஸ்தான் அணி, 397 ரன்கள் முன்னிலையுடன் உள்ளது.
இந்தநிலையில், தனது கடந்த 6 போட்டிகளை போன்று இலங்கை அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் அரைசதம் அடித்து அசத்திய பாகிஸ்தான் அணியின் சவூத் ஷகீல், இதன் மூலம் மிகப்பெரும் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 7 போட்டியிலும் அரைசதம் அடித்திருப்பதன் மூலம், ஷகீல் டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் 7 போட்டிகளிலும் அரைசதம் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சுனில் கவாஸ்கர், பாசில் பட்சர், பெர்ட் சுட்கில்ஃபே ஆகியோர் தங்களது முதல் ஆறு போட்டியிலும் அரைசதம் அடித்திருந்ததே இத்தனை வருடங்களாக சாதனையாக இருந்தது, தற்போது இதனை ஷகீல் முறியடித்து மிகப்பெரும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.