சீனியர் வீரர் பந்துவீச தடை; ரசிகர்கள் அதிர்ச்சி
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் முகமது ஹபீஸ். 39 வயதான அவர் டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிக்கான பாகிஸ்தான் அணியில் மட்டும் ஆடி வருகிறார்.
முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இந்த நிலையில் அவரது பந்து வீச்சு குறித்து சந்தேகம் கிளப்பப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீசின் பந்து வீச்சு செயல் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அப்போது அவர் விதிமுறைகளுக்கு மாறாக சட்ட விரோதமாக பந்து வீசுவது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து முகமது ஹபீஸ் இங்கிலாந்தில் நடைபெறும் அனைத்து உள்ளூர் போட்டியிலும் பந்து வீச தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹபீசுக்கு பந்து வீச தடை விதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. 2005-ம் ஆண்டு அவரது பந்து வீச்சு முறையற்றதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் தனது பந்து வீச்சை சரி செய்தார்.

ஹபீஸ் 218 ஒரு நாள் போட்டி, 89 இருபது ஓவர் மற்றும் 55 டெஸ்டில் விளையாடி இருக்கிறார்.