சற்று முன்: சர்வதேச போட்டிகளில் இருந்து பார்த்திவ் பட்டேல் ஓய்வு பெற்றார்! 1

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது முடிவை அறிவித்திருக்கிறார் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பார்த்தீவ் பட்டேல்.

இந்திய அணிக்காக தனது 17 வயதில் அறிமுகமான பார்த்தீவ் பட்டேல், முதன்முதலாக இங்கிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமானார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. மிகவும் இளம் வயதிலேயே தனது திறமையை உள்ளூர் போட்டிகளில் நிரூபித்து இந்திய அணியில் இடம்பெற்ற இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

பார்த்திவ் பட்டேலுக்கு பிறகு இந்திய அணியில் அறிமுகமான மகேந்திர சிங் தோனி, அடுத்தடுத்த போட்டிகளில் தனது அதிரடியான பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் திறமை மூலம் நிரந்தர இடம் பிடித்ததால் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அவ்வப்போது உள்ளூர் போட்டிகளில் தன்னை நிரூபித்து ஒரு சில தொடர்களில் பார்த்திவ் பட்டேல் ஆடி வந்தாலும் கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2018 ஆம் ஆண்டு விளையாடினார்.

கடந்த இரண்டு வருடங்களாக எந்தவித வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி வந்தார். நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் இவருக்கு பெங்களூரு அணியில் பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக தனது முடிவை பார்த்தீவ் பட்டேல் அறிவித்திருக்கிறார்.

தனது ஓய்வு முடிவை அறிவித்த போது பேசிய பார்த்தீவ் பட்டேல் கூறுகையில், “எனது கிரிக்கெட் வாழ்க்கைக்கு முழுக்கு போட வேண்டிய தருணம் வந்துவிட்டது. 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பலவற்றை கற்றுக் கொண்டேன். 17 வயது சிறுவனை நம்பி இந்திய அணியில் வாய்ப்பு கொடுத்த பிசிசிஐ-க்கு எனது வாழ்வு முழுவதும் கடமைப்பட்டிருக்கிறேன். இத்தகைய வாழ்க்கையை கொடுத்த கிரிக்கெட் உலகிற்கு மிகவும் பண்புடன் இருப்பேன் என தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேநேரம் என்னை இத்தனை ஆண்டுகாலம் தொடர்ந்து நம்பி வாய்ப்பளித்து வந்த குஜராத் கிரிக்கெட் அசோசியேசனுக்கு எனது நன்றிகளையும் பண்புகளையும் உரித்தாக்கிக் கொள்கிறேன். நான் அணியில் இருந்தாலும் இல்லை என்றாலும் எனக்கு பக்கபலமாக இருந்த ரசிகர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என மனமுருகி பேசினார்.

இந்திய அணிக்காக இதுவரை 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கும் பார்த்திவ் படேல், இதுவரை 934 ரன்கள் அடித்திருக்கிறார். அதேபோல் 38 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். உள்ளூர் போட்டிகளில் மிகப்பெரிய சாதனைகளைப் படைத்திருக்கும் இவர் 194 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரன்கள் குவித்திருக்கிறார்.

குஜராத் அணிக்கு கேப்டனாக இருந்து வந்த பார்த்திவ், 2016-17 ஆம் ஆண்டு சீசனில் ரஞ்சிக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றியிருக்கிறார். ஐபிஎல் தொடர்களில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *