டி20 போட்டியில் மட்டும் இவரை ஆடவைத்து திறமையை வீணாக்காதீர்கள். மூன்று வித போட்டிகளில் விளையாட கூடிய அளவிற்கு திறமை வாய்ந்தவர் ரவி பிஸ்னாய் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சபா கரீம்.
அண்டர் 19 இந்திய அணியில் விளையாடி சர்வதேச இந்திய அணியில் இடம் பிடித்த இளம் சுழல் பந்துவீச்சாளர் ரவி பிஸ்னாய், ஐபிஎல் போட்டிகளில் தன்னை மிக சிறப்பாக வளர்த்துக் கொண்டார். பஞ்சாப் அணிக்கு தொடர்ந்து விளையாடி வந்த இவர் 2022 ஆம் ஆண்டு லக்னோ அணிக்காக எடுக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற அனைத்து டி20 போட்டிகளிலும் இவருக்கு விளையாட வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் இந்திய அணியில் சரிவர இவரை பயன்படுத்தவில்லை. அவ்வப்போது கொடுத்த இவரது பங்களிப்பும் வெளியில் தெரியவில்லை.
உலகக் கோப்பைக்கு தொடர் நெருங்கி வருவதால் அதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுடன் நடக்கும் டி20 தொடரில் ரவி பிஸ்னாய்க்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. டி20 உலகக்கோப்பை அணி முன்னமே அறிவிக்கப்பட்டது. அதில் இவர் ரிசர்வ் வீரராக வைக்கப்பட்டு இருக்கிறார். இவருக்கு போதிய அனுபவமின்மை காரணமாக ரிசர்வ் செய்யப்பட்டு இருக்கிறார். அனுபவம்மிக்க சகல் மற்றும் அஸ்வின் இருவரும் அணியில் இடம்பெற்று உள்ளனர்.
இந்நிலையில் இவருக்கு மூன்றுவிதமான போட்டிகளிலும் விளையாட முழுதிறமை இருக்கிறது. உரிய முறையில் இவரை பயன்படுத்துங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தேர்வுகுழு தலைவர் மற்றும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சபா கரீம் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில்,
“ரவி பிஸ்னாய் போன்ற வீரரை நான் மூன்றுவித போட்டிகளில் விளையாடுவார் என்கிற வகையில் கணித்துள்ளேன். அந்த அளவிற்கு திறமைகளை கொண்டிருக்கிறார். தனது பந்துவீச்சில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். இந்திய அணியில், குறிப்பாக டெஸ்ட் போட்டியில், லெக் ஸ்பின்னர் இல்லை. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவர் மட்டுமே முழுநேர சுழல் பந்துவீச்சாளர்களாக இருக்கின்றனர். ஆகையால் லெக் ஸ்பின் டெஸ்ட் போட்டிகளில் தேவைப்படும். அதில் இவரை பயன்படுத்தி கொள்ளலாம். அணியில் இடம் பெற்ற முதல் வருடத்திலேயே பலரையும் தனது பக்கம் ஈர்த்திருக்கிறார. நாளுக்கு நாள் அவரது பந்துவீச்சின் நம்பிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கு முழு முக்கிய காரணம் ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடராகும்.
தற்போது லெக் ஸ்பின் இடத்தில் சஹல் இடம் பெற்றிருந்தாலும், அவர் ஒருவர் மட்டுமே அணியில் இருக்கிறார். அவ்வபோது அவர் சோதப்புகையில் இவரை பயன்படுத்தலாம். போதிய அனுபவம் கிடைக்கும். ஜடேஜா இல்லாத நேரத்தில் எவ்வாறு அக்சர் பட்டேல் உள்ளே வந்திருக்கிறாரோ? அதுபோன்று இவருக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும். பயன்படுத்தாமல் வெளியில் அமர்த்திவிட்டு அவரது திறமையை வீணாக்குவதில் எந்தவித பயனும் இல்லை.” என்றார்.