கொஞ்சம் நாகரீகமா நடந்துக்கங்க அஸ்வின்; கடுப்பான பி.சி.சி.ஐ
விளையாட்டில் நகரீகமாக நடந்து கொள்ளும் படி ரவிசந்திர அஸ்வினுக்கு பி.சி.சி.ஐ., அறிவுறுத்தியுள்ளது.
ஜெய்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லரை மன்கட் முறையில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் கேப்டன் அஸ்வின் ஆட்டமிழக்கச் செய்தார். இதில் அஸ்வின் பந்துவீசும் போது கிரீஸை விட்டு பட்லர் வெளியே சென்றதால், பந்துவீசுவதை நிறுத்தி ரன்அவுட் செய்தார் அஸ்வின்.
இந்த மன்கட் அவுட் முறை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தூதுவர் ஷேன் வார்ன் கடுமையாக விமர்சித்துள்ளார், அந்த அணியின் பயிற்சியாளர் அப்டனும் அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) மூத்த அதிகாரி ஒருவர் அளித்தபோட்டியில், ” கிரிக்கெட் மைதானத்தில், பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்கச் செய்ய கிரிக்கெட் திறமைகளையும், திறன்களையும்தான் பந்துவீச்சாளர் பயன்படுத்த வேண்டும். அப்படி பயன்படுத்தி விளையாடினால்தான், போட்டியை பார்க்கும் ரசிகர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் சரியான செய்தி சென்று சேரும்.
போட்டியை நடத்தும் அதிகாரிகள் தங்களின் பணியைச் செய்ய தவறிவிட்டனர், அந்த சூழலை கையாள்வதிலும் தோல்வி அடைந்துவிட்டனர். அந்தசூழலில் ஐசிசி விதிகள்படி நடுவர் தீர்ப்பளித்ததால், பட்லரும் தன்னை சூழலுக்குஏற்ப மாற்றிக்கொண்டு அங்கிருந்து சென்றுள்ளார். ஆதலால், அஸ்வின் விதிகளையும், விளையாட்டின் ஸ்பிரிட்டையும் கண்டிப்பாக புரிந்து கொண்டு இருவிஷயங்களையும் மனதில் வைத்து செயல்பட வேண்டும். மைதானத்தில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும்.
ஒரு வீரர் மற்றவரை கிரிக்கெட் திறமையை வைத்து ஏமாற்றலாம், ஆனால், தனது போலியான திறமைகளை வைத்து ஏமாற்றக் கூடாது. ஒருபேட்ஸ்மேன் கிரீஸை விட்டு விலகி முன்னுரிமை எடுத்தால், அதை ஜென்டில்மேன்போல் சரியான வழயில் அணுக வேண்டும். போட்டி என்பது நல்லபடியாக இருக்க வேண்டும், போட்டியில் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும் ” எனத் தெரிவித்தார்.
பிசிசிஐ அமைப்பின் மற்றொரு அதிகாரி கூறுகையில், ” அஸ்வினின் இந்த செயல்பாடு, மன்கட் அவுட் முறை தனிப்பட்ட நபரின் புகழைக் கெடுத்துவிடும், விமர்சனங்கள் அவருக்கு சங்கடங்களை ஏற்படுத்திவிடும்.
அஸ்வினுடன் கைகுலுக்காமல் ஜோஸ் பட்லர் சென்றதும் விளையாட்டின் ஸ்பிரிட்டுக்கு எதிரானதுதான். இருவிஷயங்களையும் மன்னிக்க முடியாது ” எனத் தெரிவித்தார்.