வாய்க்கு வந்ததை பேசாதீங்க; முன்னாள் வீரரை கடுமையாக சாடிய ஜடேஜா
சஞ்சய் மஞ்சுரேக்கர் தொலைக்காட்சி வர்ணனையில் சிலபல விமர்சனங்களை இந்திய அணி தேர்வு, ஆட்ட உத்தி, தோனியின் பேட்டிங் பற்றி பேசி வருகிறார், இதனையடுத்து நெட்டிசன்கள் அவரை கடுமையாக பேசி வருகின்றனர்.
இந்நிலையில் ரவீந்திர ஜடேஜாவை ‘துண்டு துணுக்கு வீரர்’ என்று வர்ணித்ததும் பெரிய சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது, மேலும் அவர் வர்ணனையில் ஒருதலைபட்சமாக வர்ணிக்கிறார் என்ற விமர்சனங்களும் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இங்கிலாந்துடன் தோற்றதையடுத்து யஜுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் இருவரும் 20 ஓவர்களில் 160 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதனையடுத்து அவரிடம் ஜடேஜாவை அணியில் கொண்டு வருவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் அளித்த பதில்,

“நான் துண்டு துணுக்கு வீரரின் பெரிய ஆதரவாளன் இல்லை, ரவீந்திர ஜடேஜா 50 ஒவர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தன் கிரிக்கெட் கரியரில் இந்த நிலையில்தான் இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் ப்யூர் பவுலர், 50 ஒவர் கிரிக்கெட்டில் என் தெரிவு என்னவெனில் ஒரு பேட்ஸ்மென் மற்றும் ஸ்பின்னர். எதிர்பாராத போட்டி முடிவுகளை வைத்து நாம் முடிவுகளை எடுக்க கூடாது, இங்கிலாந்துக்கு எதிரான போட்டி விதிவிலக்கான போட்டி அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்” என்று வங்கதேசத்துக்கு எதிராக வெற்றி பெற்ற போட்டியின் போது சஞ்சய் மஞ்சுரேக்கர் தெரிவித்தார்.
ஜடேஜா ஒரு அணியின் அங்கமாக கூப்பிடும்போதெல்லாம் பீல்டிங்கில் வந்து இரண்டு அபாரமான கேட்ச்களை எடுத்துள்ளார், அவரை அணியில் சேர்க்காதது ரவிசாஸ்திரி, கோலி மீதான விமர்சனங்களை அதிகரித்துள்ள நிலையில் சஞ்சய் மஞ்சுரேக்கர் ஜடேஜாவை பற்றி ‘துண்டு துணுக்கு’ வீரர் என்று கூறலாமா என்பதே கேள்வியாக எழுந்துள்ளது.
Still i have played twice the number of matches you have played and i m still playing. Learn to respect ppl who have achieved.i have heard enough of your verbal diarrhoea.@sanjaymanjrekar
— Ravindrasinh jadeja (@imjadeja) July 3, 2019
ரசிகர்களுக்கே கோபம் வரும் போது ஜடேஜா பேசாமல் இருப்பாரா, ட்விட்டர் கணக்கைத் திறந்தார் சொடுக்கினார் பொத்தானை வந்து விழுந்த வார்த்தைகள் இதோ:
“நீங்கள் விளையாடியதை விட இருமடங்கு போட்டிகளில் நான் ஆடிவிட்டேன், இன்னும் ஆடிக்கொண்டிருக்கிறேன். சாதனை புரிந்தவர்களை முதலில் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் ‘வெர்பல் டயரியா’ போதும்! நிறுத்துங்கள்”
என்று பொரிந்து தள்ளிவிட்டார். இவரது இந்த ட்வீட் 21கே லைக்குகள், 8.4 கே மறு பகிர்வுகள், பதில்கள் என்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது. ஏற்கெனவே தோனியை பற்றி ஏதோ புள்ளிவிவரங்களை வெளியிட்டு நெட்டிசன்களிடமும் தோனி ரசிகர்கள் பட்டாளத்திடமும் எக்கச்சக்கமாக மாட்டிய மஞ்சுரேக்கர் தற்போது தோனி படையின் ஜடேஜா மீது கையை வைத்து மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளார்.