இந்திய அணியில் இந்த ஜோடி தான் பெஸ்டு.. அதுக்கு காரணமும் இதுதான்; இர்பான் பதான் கொடுத்த ஷாக் பதில்!
இந்திய அணியில் ரோகித் – தவான் ஜோடி சிறப்பான பல சம்பவங்களை செய்வதற்கு காரணம் இதுதான் என மனம்திறந்து பேசியுள்ளார் முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான்.
இந்திய அணியில் மிகச்சிறந்த துவக்க ஜோடிகளாக கொடிகட்டிப் பறந்த சச்சின் மற்றும் கங்குலி ஜோடிக்கு இணையாக, தற்போதைய காலகட்டத்தில் ரோகித் மற்றும் தவான் துவக்க ஜோடி மிகச்சிறப்பாக ஆடி வருகிறது. இவர்கள் இருவரும் களத்தில் நிலைத்து நின்று விட்டால், எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவர்.
ஒவ்வொரு போட்டியிலும் முந்தைய சாதனைகள் பலவற்றை இந்த ஜோடி தகர்த்தெரிந்து வருகிறது. இவர்கள் இருவரும் முதன் முதலாக 2013ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரின்போது ஜோடி சேர்ந்து ஆடத் தொடங்கினார். அதன் பிறகு பலமுறை 100 ரன்கள் பார்ட்னெர்ஷிப் அமைத்து அணிக்கு பலம் சேர்த்துள்ளனர்.
தற்போது வரை, இந்த ஜோடி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மட்டுமே 4800 ரன்களுக்கும் அதிகமாக குவித்திருக்கிறது. அதிக ரன்களை குவித்த துவக்க ஜோடி பட்டியலில் இந்த ஜோடி 4வது இடத்தை பெற்றிருக்கிறது.
ரோகித் மற்றும் ஜோடி மிகச்சிறப்பான ஜோடியாக இந்திய அணியில் திகழ்வதற்கு இதுதான் முக்கிய காரணம் என குறிப்பிட்டு பேசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான். அவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
“தவான் ஆரம்பம் முதலே அடித்து ஆடுவார். ஆனால் ரோஹித் சர்மா களத்தில் நிலைப்பதற்கு நேரம் எடுத்து ஆடக்கூடியவர். குறிப்பாக, ரோஹித் களத்தில் நிலைப்பதற்கான நேரத்தை தவான் கொடுப்பார். தவான் ஆரம்பம் முதலே அடித்து ஆடுவதால், ரோஹித்தின் மந்தமான தொடக்கம் அணியை பாதிக்காத அளவிற்கு ஸ்கோர் இருக்கும். அதற்கு தவான் விரைவில் ரன் சேர்த்துவிடுவார்.
அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவரின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்தவர்கள் என்பதால், திட்டமிட்டு பந்துவீச்சாளர்களை எதிர்கொள்கின்றனர். ரோஹித் களத்தில் நிலைத்த பின்னர், அதிரடி ரன் குவிப்பில் ஈடுபடுவார். அதன்பிறகு தவான் நிதானமாக ஆட துவங்குவார். இருவருக்கும் இடையேயான புரிதல் தான் அவர்கள் சிறந்து விளங்க காரணம்.” என கூறினார் இர்பான் பதான்.