இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த 2014-இல் இதே நாளில் (டிசம்பர் 30) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவரது அந்த முடிவு இந்திய அணி வீரர்களுக்கும் ரசிகர்களுக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக இருந்தது.
இந்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்த அன்றைய நாள் இரவு தோனி என்ன செய்தார் என்பதை பகிர்ந்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ரவிச்சந்திரன் அஷ்வின்.
“டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற அந்த நாள் எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. 2014-இல் மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அணியை தோல்வியிலிருந்து தவிர்க்கும் பொருட்டு அவருடன் பேட்டிங் செய்திருந்தேன். ஆட்டம் முடிந்ததும் அவர் ஸ்டம்புகளை எடுத்துக் கொண்டு, நடையை கட்டினார். அவருக்கு அது மிகவும் உணர்ச்சிகரமான தருணம். நான், ரெய்னா மற்றும் இஷாந்த் ஷர்மா என மூவரும் அன்று மாலை அவரது அறையில் இருந்தோம். அன்று இரவு முழுவதும் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் ஜெர்சியை தோனி அணிந்திருந்தார். அப்போது அவர் சில துளி கண்ணீரும் சிந்தினார்” என அஷ்வின் தெரிவித்துள்ளார்.
மொத்தம் 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள தோனி, மொத்தம் 4,876 ரன்களை எடுத்துள்ளார். 6 சதம் மற்றும் 33 அரைசதம் இதில் அடங்கும். அவரது பேட்டிங் சராசரி 38.09 ரன்களாகும்.