ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 150 சிக்ஸர் அடித்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார் இந்திய அணியின் தொடக்கவீரர் ரோகித் சர்மா. அவர் தற்போது இந்திய அணிக்காக நியூஸிலாந்து அணியுடன் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறார். தனது 165வது இன்னிங்சில் 150 சிக்ஸரை அடித்தார் ரோகித் சர்மா. இந்த பட்டியலில் பாகிஸ்தான் அணியின் அதிரடி வீரர் ஷாஹித் அப்ரிடி 160வது இன்னிங்சில் 150 சிக்ஸர் அடித்தார்.
இந்த பட்டியலில் மக்களுக்கு பிடித்த தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியும் உள்ளார். 2013ஆம் ஆண்டில் தான் இந்திய அணிக்கு தொடக்கவீரராக களமிறங்கி தான் யார் என நிரூபித்து சிறப்பாக விளையாடி வருகிறார் ரோகித் சர்மா. சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், கிறிஸ் கெய்ல், பிரண்டன் மெக்கல்லம் ஆகியோரும் இந்த பட்டியலில் உள்ளார்கள்.
அதிரடியாக விளையாடி வரும் நியூஸிலாந்து:
337 என்னும் கடினமான இலக்கை துரத்தும்போது, தொடக்கத்திலேயே மார்ட்டின் குப்திலின் விக்கெட்டை பறிகொடுத்தது நியூஸிலாந்து. ஆனால், முதல் ஓவரிலேயே 19 ரன் அடித்து விளாசினார் கோலின் முன்றோ. சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த முன்றோவை கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார் யுஸ்வேந்த்ர சஹால். இதனால், இந்த கடினமான இலக்கை அடைய அனைத்து நியூஸிலாந்து பேட்ஸ்மேன்களும் பொறுப்பாக விளையாடவேண்டும். இந்திய அணி தரப்பில், நியூஸிலாந்து வீரர்களின் விக்கெட்டை சீரான இடைவெளியில் எடுக்கவேண்டும்.