ருத்ராஜ் மகாராஷ்டிராவில் உள்ள புனேவில் பிம்பிரி சின்ச்வாத் என்கிற ஊரில் பிறந்த ஒரு கிரிக்கெட் வீரர். 24 வயதான அவர் சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே டிராபி தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கேப்டனாக செயல்பட்டார். விஜய் ஹசாரே அளவில் மிகச் சிறப்பாக செயல்படாத ருத்ராஜ் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக விளையாடினார்.
டுப்லஸ்ஸிஸ் உடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடிய அவரது திறமையை கண்ட இந்திய தேர்வு குழு அவரை தற்போது இலங்கைக்கு எதிராக நடக்க இருக்கின்ற மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணியில் விளையாட ஒரு வீரராக தேர்ந்தெடுத்துள்ளது. இதன் மூலம் பிம்பிரி சின்ச்வாத் ஊரிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு விளையாட வரும் முதல் கிரிக்கெட் வீரர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இந்திய அணிக்காக முதல் முறையாக 24 வயதான ருத்ராஜ் களமிறங்கப் போகிறார். வருகிற ஜூலை மாதம் 13ம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொழும்புவில் நடைபெற உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிக சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ்
கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்படவில்லை ஆனால் இறுதியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை மிக சரியாக பயன்படுத்திக் கொண்டு தொடர்ச்சியாக மூன்று அரை சதங்கள் குவித்தார். அதேபோல இந்த ஆண்டு ஆரம்பத்தில் மூன்று போட்டிகள் சரியாக அவர் விளையாடவில்லை, எனினும் மீதமுள்ள போட்டிகளில் மிக சிறப்பாக செயல்பட்டு இரண்டு அரை சதங்கள் குவித்தார்.
சீனியர் வீரர்கள் அனைவரும் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் தவான் தலைமையில் இளம் வீரர்களைக் கொண்ட அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. உள்ளூர் ஆட்டங்களில் மற்றும் ஐபிஎல் தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் இவருக்கு ஒரு வாய்ப்பை தற்போது இந்திய தேர்வு குழு வழங்கிய இருக்கிறது.
ருத்ராஜுக்கு திலிப் வெங்சர்க்கார் அறிவுரை
இந்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலிப் வெங்சர்க்கார் ருத்ராஜ் தனக்கு கிடைத்த வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இளம் வயது ருத்ராஜ் சர்வதேச பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு மிக சிறப்பாக விளையாடியதை நான் பார்த்திருக்கிறேன். அவரிடம் திறமைகள் நிறைய இருக்கின்றன.
எனவே அவர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு இந்திய அணியில் நீண்ட காலம் விளையாடும் அளவுக்குத்தான் திறமையுள்ள வீரர் என்பதை நிரூபிக்கும் வண்ணம் தன்னுடைய விளையாட்டை இலங்கைக்கு எதிரான தொடரில் காண்பிக்க வேண்டும் என்று திலிப் வெங்சர்க்கார் ருத்ராஜுக்கு அறிவுரை கூறியிருக்கிறார்.