ஓபனாவே சொல்றேன்… சென்னை அணியின் தோல்விக்கு இந்த இரண்டு விசயம் தான் காரணம்; ருத்துராஜ் கெய்க்வாட் வேதனை
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
17வது ஐபிஎல் தொடரின் 18வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் மோதின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இரு அணிகள் இடையேயான இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்பின் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக சிவம் துபே 45 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அந்த அணியின் துவக்க வீரரான அபிசேக் ஷர்மா 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து கொடுத்தார். மற்றொரு துவக்க வீரரான ஹெட் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களத்திற்கு வந்த மார்கரம் 50 ரன்கள் எடுத்து கொடுத்ததன் மூலம் 18.1 ஓவரில் இலக்கை இலகுவாக எட்டிய ஹைதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியும் பெற்றது.
இந்தநிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த தோல்வி குறித்து பேசிய சென்னை அணியின் கேப்டனான ருத்துராஜ் கெய்க்வாட், ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருத்துராஜ் கெய்க்வாட் பேசுகையில், “உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஆடுகளத்தின் தன்மை ஸ்லோவாக இருந்தது. ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டது. எங்களது துவக்கம் ஓரளவிற்கு சிறப்பாகவே இருந்தாலும், ஹைதராபாத் அணி பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு எங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியது. பந்துவீச்சின் போது பவர்ப்ளே ஓவர்களில் நாங்கள் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம், டர்வீஸ் ஹெட் கொடுத்த கேட்சை தவறவிட்டதும், ஒரே ஓவரில் அதிகமான ரன்களை வழங்கியதும் எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்திவிட்டது. இருந்த போதிலும் போட்டியை 19வது ஓவர் வரை எடுத்துவந்ததில் மகிழ்ச்சி தான். 170 முதல் 175 ரன்கள் எடுத்தாலே போதும் என்று தான் நினைத்திருந்தோம், ஆனால் இரண்டாவது இன்னிங்ஸின் போது பனிப்பொழிவு இருந்ததால் நாங்கள் நினைத்தது நடக்கவில்லை. தவறுகளை சரி செய்து கொள்வோம்” என்று தெரிவித்தார்.