விராட் கோலியிடம் இருந்து இது போதும் என்று நினைக்கும் போது, மேலும் சிறப்பாக விளையாடுகிறார் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி. தென்னாப்ரிக்காவிற்கு சென்று எல்லா இடத்துலயும் அய்யா தான் கில்லி என்று நிரூபித்தார் கோலி.
தென்னாபிரிக்கா அணியுடன் விளையாடிய டெஸ்ட் தொடரில், அனைவரும் திணறிய போது, அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையை பெற்றார் விராட் கோலி. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சதம் அடித்த ஒரே வீரர் விராட் கோலி தான். அபாரமாக விளையாடிய கோலி, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 153 ரன் அடித்தார். அதே பார்முடன் ஒருநாள் தொடருக்கும் வந்த அவர் எதிரணி பந்துவீச்சாளர்களை கண்கலங்க வைத்தார்.
முதல் ஒருநாள் போட்டியில் தன் கணக்கை தொடங்கிய கோலி, 269 ரன் சேசிங் செய்யும் போது 112 ரன் அடித்து அசத்தினார். அதன் பிறகு இரண்டாவது போட்டியில் 46 ரன் அடித்த அவர், மூன்றாவது போட்டியில் மீண்டும் ஒரு சதம் அடித்து 160 ரன் சேர்த்தார். நான்காவது மற்றும் ஐந்தாவது ஒருநாள் போட்டியில் 75 மற்றும் 36 ரன் அடித்த அவர், கடைசி ஒருநாள் போட்டியில் மேலும் ஒரு சதம் அடித்து அமர்க்கள படுத்தினார். இதனால், இந்திய அணி தென்னாப்ரிக்காவை ஒருநாள் தொடரில் 5-1 என்ற கணக்கில் வீழ்த்தியது.
82 பந்தில் சதம் அடித்த விராட் கோலி, தனது 35வது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்தார். இந்த தொடரில் அது அவர் அடித்த மூன்றாவது சதம் ஆகும். விராட் கோலியின் சதத்தால் 33வது ஓவரில் இலக்கை அடைந்து தொடரை வென்றது இந்தியா. அந்த போட்டி முடிந்ததும், விராட் கோலி தான் தலை சிறந்த வீரர் என்று ட்வீட் செய்தார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைகேல் வாகன்.