சச்சினா? விராட் கோலியா? யார் சிறந்தவர் என்கிற கேள்விக்கு லெஜெண்ட் கபில் தேவ் தெளிவான விளக்கம் கொடுத்திருக்கிறார்.
சமீபகாலமாக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சச்சின் டெண்டுல்கர் சிறந்தவரா? அல்லது விராட் கோலி சிறந்தவரா? என்கிற விவாதங்கள் ரசிகர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் இருந்து வருகிறது. ஏனெனில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை விராட் கோலி தகர்த்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்திய மண்ணில் அதிக சதங்கள் அடித்திருந்த சச்சின் டெண்டுல்கரின்(20 சதங்கள்) சாதனையை விராட் கோலி முறியடித்து 21 சதங்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.
சர்வதேச போட்டிகளில் சச்சினின் தகர்க்கமுடியாத சதனையாக பார்க்கப்படுவது 100 சதங்கள். இதற்கு அடுத்த அதிகபட்சமாக விராட் கோலியின் 74 சதங்கள் இருக்கிறது. ஆகையால் தற்போது சச்சினின் சாதனையை எட்டுவதற்கு அல்லது முறியடிக்க விராட் கோலியால் மட்டுமே முடியும் என்கிற கணிப்பும் நிலவுகிறது.
இதற்கிடையில் சச்சின் அல்லது விராட் கோலி இருவரில் யார் சிறந்தவர் என்கிற கேள்வியை, இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் உலககோப்பையை முதல்முறையாக இந்தியாவிற்கு பெற்றுக்கொடுத்தவருமான லெஜெண்ட் கபில் தேவ் முன்னிலையில் வைத்துள்ளனர். இதற்கு அவர் நயமாக பதில் கொடுத்திருக்கிறார். கபில் தேவ் பதில் கொடுத்ததாவது:
“இருவரும் அவரவர் காலகட்டத்தில் உச்சத்தை தொட்டவர்கள். இருவரும் தலைசிறந்த வீரர்கள் என்பதற்கு அத்தனை திறமைகளும் கொண்டிருந்ததால் உச்சத்தை பெற்றிருக்கிறார்கள். இருவரும் வெவ்வேறு காலகட்டத்தில் விளையாடியதால் எப்படி ஒருவரை மற்றொருவருடன் ஒப்பிட முடியும்.
எனது காலகட்டத்தில் கவாஸ்கர் தலைசிறந்த வீரராக இருந்தார். எனக்கு அடுத்த காலக்கட்டத்தில் சச்சின் டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், வீரேந்திர சேவாக் போன்றோர் சிறந்த வீரர்களாக இருந்தனர். சமகாலகட்டத்தில் ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோர் சிறந்த வீரர்களாக இருக்கின்றனர்.
இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிறந்த வீரர்கள் தங்களை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். ஒரு காலகட்டத்தில் விளையாடிவரை இன்னொரு காலகட்டத்தில் ஒப்பிட முடியாது. ஒப்பிடுவது எந்த வகையில் நியாயம் என புரியவில்லை.
நீங்கள் கேட்ட சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி இரண்டு பேரும் வெவ்வேறு காலகட்டத்தில் சாதித்தவர்கள். இவர்கள் இருவரிடமும் எனக்கு பிடித்ததும் இருக்கிறது. பிடிக்காததும் இருக்கிறது. கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. கோல்ப், டென்னிஸ் போன்று தனி வீரரின் விளையாட்டு அல்ல. ஆகையால் அணியாக செயல்படும்போது ஒரு வீரரை மட்டும் பெருமிதமாக கொள்வது சரியானதாக இருக்காது.” என்றார்.