கொரோனா வைரஸ் பீதி; தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்ட முன்னாள் வீரர்
சீனாவிலிருந்து மையத்தை மாற்றிக் கொண்டு ஐரோப்பாவை மையமாகக் கொண்டு தாண்டவமாடி வரும் கோவிட்-19 என்ற கரோனா வைரஸ் பாதிப்பு நாடான இங்கிலாந்திலிருந்து திரும்பிய இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்காரா அரசாங்க உத்தரவுகளின் படி தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
“எனக்கு எந்த வித நோய் அறிகுறியும் இல்லை, இருந்தாலும் மற்றவர்களின் நன்மை கருதி அரசாங்க வழிகாட்டுதல்களின் படி சுய தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.
நான் லண்டனிலிருந்து வந்து ஒருவாரம் ஆகிறது. மார்ச் 1 முதல் 15ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் போலீஸாரிடம் பதிவு செய்து கொண்டு தனிமைப்பட வேண்டும் என்ற செய்தி கேட்டேன், நானே பதிவு செய்து கொண்டு தனிமையை அனுபவித்து வருகிறேன்.
சமீபத்தில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய 3 பேர் கரோனா டெஸ்ட்டிலிருந்து தவிர்க்க முயன்றதையும் பிறகு அவர்களுக்கு கரோனா இருப்பதும் உறுதி செய்யப்பட்டதை அறிந்தேன்” என்றார்.
இலங்கையில் இதுவரை 80 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.