அஸ்வினை தேடி வரும் அதிர்ஷ்டம்… உலகக்கோப்பையில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கிடைப்பது உறுதி; முன்னாள் வீரர் அரூடம்
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆஸ்திரேலிய அணியுடனான நடப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரரான ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட்டது.
உலகக்கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், சம்பந்தமே இல்லாமல் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் அஸ்வினை சேர்ப்பது ஏன்..? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அஸ்வினுக்கு பதிலாக இளம் வீரர்கள் யாருக்காவது வாய்ப்பு கொடுத்து அவர்களை உருவாக்கலாம், அஸ்வினுக்கு இடம் கொடுத்தது தேவையற்றது என பலரும் பேசினர்.
ஆனால் தன் மீதான அனைத்து விமர்சனங்களையும் பொய்யாக்கும் வகையில், ஆஸ்திரேலிய அணியுடனான நடப்பு ஒருநாள் தொடரில் பந்துவீச்சில் மிக சிறப்பாக செயல்பட்டு வரும் அஸ்வின், இந்திய அணிக்கான தனது வேலையையும் சரியாகவே செய்து வருகிறார். இதனால் ரவிச்சந்திர அஸ்வினுக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் இடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அதே போல் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள அக்ஷர் பட்டேலும் அடிக்கடி காயமடைந்து வருவதால், அக்ஷர் பட்டேலின் இடம் அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பலரும் பேசி வருகின்றனர்.
அந்தவகையில், ரவிச்சந்திர அஸ்வின் குறித்து பேசியுள்ள முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் பங்கர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ரவிச்சந்திர அஸ்வினுக்கு இடம் கொடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சஞ்சய் பங்கர் பேசுகையில், “அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வரும் அக்ஷர் பட்டேல் காயத்தில் இருந்து விரைவில் முழுமையாக குணமடையாவிட்டால் அவர் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனது இடத்தை இழப்பார். உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அக்ஷர் பட்டேலின் இடம், ரவிச்சந்திர அஸ்வினுக்கு கொடுக்கப்படும் என தெரிகிறது. பேட்டிங்கில் ரவிச்சந்திர அஸ்வின் பெரியாக செயல்படுவது இல்லை என்பதே உண்மை, ஆனால் தேவை ஏற்பட்டால் அவர் 8வது இடத்தில் களமிறங்கி தன்னால் முடிந்ததை நிச்சயம் இந்திய அணிக்காக செய்து கொடுப்பார். ஆடுகளத்தை பொறுத்தே ஆடும் லெவனும் தேர்வு செய்யப்படும். சென்னை சேப்பாக்கத்தில் விளையாடினால் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களின் தேவை இந்திய அணிக்கு ஏற்படும். அந்த நேரத்தில் அக்ஷர் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டிருந்தால் அது இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.எனவே அக்ஷர் பட்டேலுக்கு பதிலாக ரவிச்சந்திர அஸ்வினுக்கு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் என கருதுகிறேன்” என்று தெரிவித்தார்.