உலக கோப்பை தொடரில் வங்கதேச அணியின் நாயகனாகத் திகழ்ந்த சகிப் அல் ஹசனுக்கு ஓரிரு தொடர்களில் ஓய்வு கொடுத்துள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம்.
உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி சிறப்பாக செயல்பட்டு தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளை வீழ்த்தியது.
உலக கோப்பை தொடருக்கு முன்பாக, 5வதாக இறங்கினால் சரிவர ஆட முடியவில்லை. மூன்றாவது இடத்தில் இறக்கினால் தான் நான் நன்றாக ஆடுவேன் என போராடினார் சகிப் அல் ஹசன். அவர் விருப்பப்படியே 3வது இடத்தில் இறங்க வாய்ப்பு கொடுக்கப்பட்டது. அவர் கூறியபடியே உலக கோப்பை தொடரில் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தும் அளவிற்கு மிகச் சிறப்பாக செயல்பட்டு அணியை தனி ஆளாக கிட்டத்தட்ட அரையிறுதி வரை எடுத்துச் சென்றார் எனக் கூறினால் அது மிகையாகாது.
8 போட்டிகளில் ஆடிய சகிப் அல் ஹசன், பேட்டிங்கில் 606 ரன்கள் மற்றும் பவுலிங்கில் 10 விக்கெட்டுகள் என உலகின் நம்பர்-1 ஆல்ரவுண்டர் நான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார். இது உலக கோப்பை தொடரில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ரன்களாகும். அதில் இரண்டு சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் இவரது குறைந்தபட்ச ஸ்கோர் 41 மட்டுமே. இவரது சராசரி கிட்டத்தட்ட 87 ஆகும்.
வரலாறு காணாத வகையில் சிறப்பாக செயல்பட்ட இவருக்குத்தான் தொடர் நாயகன் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தனி ஆளாக உலக கோப்பை இறுதிப் போட்டி வரை நியூசிலாந்து அணியை எடுத்துச்சென்ற கேன் வில்லியம்சனுக்கு இறுதியில் தொடர் நாயகன் விருது கைமாறியது.
உலக கோப்பையை அடுத்து இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள வங்கதேச அணியில் இவர் இடம்பெறவில்லை. ஓரிரு தொடர்களில் இவருக்கு சம்பளத்துடன் கூடிய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இலங்கை தொடரில் கேப்டன் பொறுப்பில் மோர்தாசா நீடிப்பார் என்பதையும் தெரிவித்திருந்ததும் வங்கதேச கிரிக்கெட் வாரியம்.