பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் குல்னா டைட்டன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன்.
இந்தியன் பிரிமியர் லீக் தொடர் அனைத்து நாட்டு வீரர்களையும் பெரிதும் ஈர்த்தது. அதை தொடர்ந்து பங்களாதேஷ், பாகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற நாடுகளிலும் உள்ளூர் பிரீமியர் லீக் தொடர் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்தியன் பிரீமியர் லீக் போலவே அங்கும் வீரர்கள் ஒப்பந்த முறையில் வெவ்வேறு நாடுகளில் இருந்து எடுக்கப்பட்டு ஆட வைக்கப்படுகின்றன.
கனடாவிலும் சென்ற ஆண்டிலிருந்து டி20 லீக் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. அதில், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன் போன்ற முன்னணி வீரர்களும் பங்கேற்கின்றனர். 2019-20 ஆண்டு தொடரில் அண்மையில் ஓய்வு முடிவை அறிவித்த யுவராஜ் சிங் பங்கேற்க உள்ளார். இதற்காக பிசிசிஐ ஒப்புதலும் அளித்துள்ளது.
கடந்த இரண்டு சீசன்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆடி வரும் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டர் ஷேன் வாட்சன் 2019-20ஆம் ஆண்டு பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரில் ஆடுவதற்கு குல்னா டைட்டன்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் 2019ஆம் ஆண்டு சென்னை அணிக்காக பிளே ஆப் மற்றும் இறுதி போட்டியில் சிறப்பாக ஆடினார். இறுதியில், 1 ரன் வித்தியாசத்தில் சென்னை அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பை பரம எதிரிகளான மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.