சென்னை ரசிகர்களுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்த சேன் வாட்சன்
ஐபிஎல் 12வது சீசனின் இறுதி போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றியது மும்பையாக இருந்தாலும், ஹீரோ ஆனது வாட்சன் தான்.
ஐபிஎல் 12வது சீசன் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. இந்த சீசனில் நான்காவது முறையாக மும்பை இந்தியன்ஸும் சிஎஸ்கேவும் இறுதி போட்டியில் மோதின. சிஎஸ்கேவை 3வது முறையாக இறுதி போட்டியில் வீழ்த்தி நான்காவது முறையாக கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ்.
இறுதி போட்டியில் மும்பை அணி நிர்ணயித்த 150 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ஷேன் வாட்சன், கடைசி ஓவர் வரை களத்தில் நின்று போராடினார். பேட்டிங் ஆடும்போது ரன் ஓடுகையில் டைவ் அடித்து காலில் காயம் ஏற்பட்டபோதும் அதை வெளியே சொல்லாமல் வலியை வெளிக்காட்டி கொள்ளாமல் ரத்தம் ஊற்ற ஊற்ற அணிக்காக கடைசி வரை போராடினார். ஆனாலும் கடைசி ஓவரின் நான்காவது பந்தில் அவர் ரன் அவுட்டானதால் மும்பை அணி வென்றது.
வாட்சனின் அர்ப்பணிப்பை கண்டு வியந்த ரசிகர்கள், அவரை பாராட்டி தள்ளியதோடு மிகவும் உருக்கமாக வழியனுப்பிவைத்தனர். வாட்சனின் செயல் சிஎஸ்கே ரசிகர்களை மட்டுமல்ல, உலக ரசிகர்களையே கவர்ந்திழுத்தது.
வாட்சன் ரத்தத்துடன் ஆடிய தகவல் வெளிவந்ததிலிருந்தே வாட்சன் தான் ஹாட் டாபிக். வாட்சன் மீதான கிரிக்கெட் ரசிகர்களின் அபிப்ராயம் எகிறியது. வாட்சன் பிக்பேஷ் லீக்கிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஐபிஎல்லிலும் முழு உடற்தகுதி இல்லாமல்தான் ஆடிவந்தார். எனவே அடுத்த சீசனில் ஆடுவாரா என்ற சந்தேகம் இருந்த நிலையில், அதற்கு வீடியோ மூலம் பதிலளித்துள்ளார்.
View this post on InstagramNext year we will come back stronger #whistlepodu @chennaiipl ?
A post shared by Shane Watson (@srwatson33) on
ஆஸ்திரேலியாவிற்கு சென்றுவிட்ட வாட்சன், இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் தனக்கு அளித்துவரும் ஆதரவிற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நூழிலையில் வெற்றியை தவறவிட்டதை சுட்டிக்காட்டி, அடுத்த சீசனில் கூடுதல் வலிமையுடன் இன்னும் சிறப்பாக ஆடி தெறிக்கவிடுவோம் என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் அடுத்த ஐபிஎல் சீசனில் அவர் ஆடுவதை உறுதிப்படுத்தியுள்ளார்.