எதிர்வரும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டியில் இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர் தெரிவித்துள்ளார்.
சர்வதேச டி.20 போட்டிகளுக்கான சாம்பியனை தீர்மானிக்கும் டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் மாதம் துவங்க உள்ளது. கடந்த டி.20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கொரோனா காரணமாக துபாயில் வைத்து நடத்தப்பட்ட நிலையில், இந்த வருடத்திற்கான தொடர் ஆஸ்திரேலியாவில் வைத்து நடத்தப்பட உள்ளது.
அக்டோபர் 16ம் தேதி நவம்பர் 13ம் தேதி வரை நடைபெற இருக்கும் இந்த தொடரில் மொத்தம் 42 லீக் போட்டிகள் இருந்தாலும், மற்ற அனைத்து போட்டிகளையும் விட, அக்டோபர் 23ம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற இருக்கும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி மீதே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
கிட்டத்தட்ட கிரிக்கெட் போராகவே பார்க்கப்படும் இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுவதால், இந்தியா மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த முன்னாள் வீரர்கள் பலர் தற்போதே இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி குறித்தான தங்களது கருத்துக்களையும், கணிப்புகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டி குறித்து பல்வேறு விசயங்கள் பேசிய முன்னாள் பாகிஸ்தான் வீரரான சோயிப் அக்தர், இந்த முறை இந்திய அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து சோயிப் அக்தர் பேசுகையில், “தற்போதைய இந்திய அணி வலுவானதாக உள்ளது. டி.20 உலககோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி மட்டும் சரியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டால் போதும், அதில் இந்திய தேர்வாளர்கள் சொதப்பினால் அதனால் இந்திய அணி கடந்த தொடரை போலவே இந்த தொடரிலும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கும். எனவே இந்திய தேர்வாளர்கள் சரியான அணியை தேர்வு செய்வதில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இந்திய அணி சரியாக தேர்வு செய்யப்பட்டுவிட்டால் அது பாகிஸ்தான் அணிக்கு பெரும் பிரச்சனையை கொடுக்கும். கடந்த தொடரை போன்று இந்திய அணி இந்திய அணி இந்த முறை சொதப்பாது என்றே கருதுகிறேன். எனவே பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இரு அணிகளும் சமபலம் கொண்ட அணிகள் என்பதால் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்பதை கணிப்பது மிக கடினம், ஆனால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு சற்று அதிகம் என தோன்றுகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான போட்டி நடைபெற இருக்கும் மெல்போர்ன் ஆடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமானது என்பதால் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு பிரச்சனை தான். அதே போல் மைதானத்தில் ஒரு லட்சம் ரசிகர்கள் இருப்பார்கள் அதில் குறைந்தது 70,000 ரசிகர்கள் இந்திய அணிக்கே ஆதரவு தெரிவிப்பார்கள் என்பதால் பாகிஸ்தான் அணி மீது அதிக அழுத்தம் ஏற்படும், எனவே பாகிஸ்தான் வீரர்கள் இந்த முறை கவனமாக செயல்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.