முகமது ஷமி மீது அவரது மனைவி மேலும் ஒரு பகீர் குற்றச்சாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி மீது அவரது மனைவி ஹசீன் ஜஹான் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமி, இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு எதிரான நடப்பு முத்தரப்பு தொடரில் வாய்ப்பு கிடைக்காததால் தியோதர் டிராபியில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில் இவரது மனைவி ஹசீன் ஜாஹன், கடந்த இரு தினங்களாக ஷமி மீது அடுக்கடுக்கான பல குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்.
நேற்று முகமது ஷமிக்கு பல பெண்களுடன் தவறான தொடர்பு இருப்பதாகவும், தன்னையும் கடந்த இரண்டு வருடங்களாக ஷமி கொடுமைப்படுத்தியதாகவும் கூறிய ஹசீன் ஜஹான் தற்போது புதிய குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.
செய்தி தொலைக்காட்சி ஒன்றிற்கு இது குறித்து ஷமியின் மனைவி அளித்துள்ள பேட்டியில், எனது கணவருக்கு தீவிரவாத குழுக்களுடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. அவர் வெளிநாடுகளுக்கு சென்று திரும்பும் போது எல்லாம் அவரது பேக்கில் சில பொருட்களை நான் பார்த்துள்ளேன். அது அவருக்கு தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளிடம் இருந்து கிடைத்திருக்கலாம் என்று நினைக்கிறேன். இது குறித்தும் காவல்த்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், ஷமி பல பெண்களுடன் சாட் செய்ததற்கான ஆதரத்தை வெளியிட்ட அவரது மனைவி, ஷமி மீதான இந்த குற்றச்சாட்டிற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை. ஷமியை வலுவாக சிக்க வைப்பதற்காக ஹசீன் ஜஹான் இவ்வாறு கூறி இருக்கலாம் என்று தெரிகிறது.
தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ஷமி கூறியதாவது, என்னை சுற்றி பல சதிகள் நடக்கின்றன. எனது முன்னேற்றத்தை தடுக்க என்னுடன் இருப்பவர்கள் பலரே எனக்கு எதிராக பல சதிச்செயல்களை செய்து வருகின்றனர். எனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து வெளியாகும் அனைத்து தகவல்களும் போலியானது, அதில் துளியளவும் உண்மையில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.