தென்ஆப்பிரிக்காவில் இந்தியா ‘ஏ’, தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ மற்றும் ஆப்கானிஸ்தான் ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.
ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். அதனடிப்படையில் இந்தியா ‘ஏ’ மற்றும் தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணிகள் தலா மூன்று வெற்றிகள் பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இன்று இறுதிப் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணியின் கேப்டன் மணீஷ் பாண்டே பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணியின் டேவிட்ஸ், ஹென்றிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். டேவிட்ஸை 20 ரன்னிலும், ஹென்றிக்ஸை 5 ரன்னிலும் வெளியேற்றினார் கவுல். அடுத்து களம் இறங்கிய விக்கெட் கீப்பர் க்ளாசனை 6 ரன்னில் தாகூர் பெவிலியனுக்கு அனுப்பினார்.
5-வது வீரராக களம் இங்கிய பெஹார்டியன் அவுட்டாகாமல் 101 ரன்களும், 7-வது வீரராக களம் இறங்கிய ப்ரெட்டோரியஸ் 58 ரன்களும் சேர்க்க தென்ஆப்பிரிக்கா ‘ஏ’ அணி 50 ஒவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 267 ரன்கள் எடுத்தது. இந்தியா ‘ஏ’ அணி சார்பில் தாகூர் 3 விக்கெட்டும், கவுல் இரண்டு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் 268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா ‘ஏ’ அணியின் சஞ்சு சாம்சன், கருண் நாயர் ஆகியோர் களம் இறங்கினார்கள் சாம்சன் 12 ரன்னிலும், கருண் நாயர் 4 ரன்னிலும் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தனர்.
3-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் விஜய் சங்கர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா வெற்றியை நோக்கிச் சென்றது. இந்தியா ‘ஏ’ அணி 24.5 ஓவரில் 100 ரன்னைத் தாண்டியது. ஷ்ரேயாஸ் அய்யர் 74 பந்தில் அரைசதமும், விஜய் சங்கர் 68 பந்தில் அரைசதமும் அடித்தனர்.
இந்தியா ‘ஏ’ அணியின் ஸ்கோர் 34.2 ஓவரில் 161 ரன்னாக இருக்கும்போது விஜய் சங்கர் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 141 ரன்கள் குவித்து வெற்றிக்கு அடித்தளம் அமைத்தது.
4-வது விக்கெட்டுக்கு ஷ்ரேயாஸ் அய்யருடன் மணீஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். 74 பந்தில் அரைசதம் அடித்த ஷ்ரேயாஸ் அய்யர் அதன்பின் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இந்தியா ‘ஏ’ அணி 39.1 ஓவரில் 200 ரன்னைத் தொட்டது.
ஷ்ரேயாஸ் அய்யர் 111 பந்தில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன் சதம் அடித்தார். 51 ரன்னில் இருந்து 100 ரன்னை 37 பந்தில் சேர்த்தார். அய்யர் தொடர்ந்து அதிரடி காட்ட இந்தியா ‘ஏ’ அணி 46.5 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
ஷ்ரேயாஸ் அய்யர் 131 பந்தில் 11 பவுண்டரி, 4 சிக்சருடன் 140 ரன்களுடனும், மணீஷ் பாண்டே 38 பந்தில் 1 சிக்சருடன் 32 ரன்கள் எடுத்தும் அவுட்டாகமல் இருந்தனர்.