சேட்டைய குறைச்சிக்க சாஹல்… கடுப்பான சுனில் கவாஸ்கர்
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியின் முக்கியமான கட்டத்தில் நோ பால் போட்டு, போட்டியை மாற்றிய சாஹலை, முன்னாள் சுனில் கவாஸ்கர் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு 289 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
இதனையடுத்து தென் ஆப்ரிக்கா அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும், 202 ஆக குறைக்கப்பட்டது.
ஒருநாள் போட்டி டி.20 போட்டியாக மாறியதை பயன்படுத்தி கொண்ட தென் ஆப்ரிக்கா வீரர்கள் சிக்ஸர் மழை பொழித்து கொண்டிருந்த போது, தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு முக்கிய காரணமான மில்லர், சாஹல் வீசிய ஒரு பந்தில் விக்கெட்டை இழந்தார். ஆனால் அது ரிவியூவில் நோ – பால் என தெரிந்தது.
கவனக்குறைவால் போட்டியை மாற்றிய சாஹலை பலரும் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் கவாஸ்கரும் தனது பங்கிற்கு விமர்சித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கிரிக்கெட்டை பொறுத்தவரையில் வேகப்பந்து வீச்சாளர்கள் சில சமயங்களில் நோ – பால் போடுவது வழக்கம், ஆனால் சுழற்பந்து வீச்சாளர்கள் எப்படி நோ – பால் போடும் அளவிற்கு கவனக்குறைவாக இருக்கின்றனர் என்பது தெரியவில்லை. இது தெரியாமல் நடந்தது என்று எடுத்து கொண்டாலும், என்னை பொறுத்தவரையில் சாஹலின் அசால்டு தனம் தான் இதற்கு காரணம். முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுவிட்டதால் இந்திய வீரர்கள் நான்காவது போட்டியில் அசால்டாக விளையாடியதாக தெரிகிறது. தென் ஆப்ரிக்கா வீரர்களும் அபாரமாக பேட்டிங் செய்தனர், இந்த வெற்றிக்கு அவர்கள் நிச்சயம் தகுதியானவர்கள் தான்” என்று தெரிவித்துள்ளார்.