தவறாக அவுட் கொடுத்துவிட்டதாக ஸ்டம்ப் மைக்கில் கோபப்பட்ட விராட் கோலிக்கு ஒளிபரப்பு நிறுவனம் பதில் கொடுத்திருக்கிறது.
இந்தியா தென்ஆப்பிரிக்கா அணிகள் விளையாடிய 3வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சில தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அஸ்வின் வீசிய பந்து அவரது காலில் பட்டதால் எல்பிடபிள்யூ கொடுக்கப்பட்டது. இதற்கு மேல்முறையீடு செய்தார் எல்கர்.
அவருக்கு அவுட் இல்லை என மூன்றாவது நடுவரால் தீர்ப்பு மாற்றிக் கொடுக்கப்பட்டது. குறிப்பாக அஸ்வின் வீசிய பந்து ஸ்டம்பை அடிக்காமல் மேலே சென்றுவிட்டதாக ஹாக்-ஐ தொழில்நுட்பத்தில் காட்டப்பட்டது.
சுழல் பந்துவீச்சாளர் வீசிய பந்து இந்த அளவிற்கு எழும்பாது. எப்படி ஸ்டம்பை அடிக்காமல் சென்றிருக்கும் என கடும் ஆத்திரத்திற்கு உள்ளான இந்திய வீரர்கள் களத்தில் இருந்த ஸ்டம்ப் மைக்கை பயன்படுத்தி ஹாக்-ஐ தொழில்நுட்பத்தின் மீதும், அதனை தவறுதலாக பயன்படுத்தியதாக சூப்பர் ஸ்போர்ட் நிறுவனத்தின் மீதும் டுமையாக சாடினார்.
குறிப்பாக, இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வரும் போட்டியை ஒளிபரப்பு செய்யும் நிறுவனமான சூப்பர் ஸ்போர்ட் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்துவிட்டதாக விராட் கோலி கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. “தென்ஆப்பிரிக்க வீரர்கள் பந்தை தவறாக பயன்படுத்தினார்கள். அப்போது நீங்கள் காட்டவில்லை. மேலும் இப்போது ஹாக்-ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஏமாற்றி விட்டீர்கள்.” என அடுத்தடுத்து குற்றச்சாட்டுக்களை மைக் மூலம் அடுக்கினார்.
“11 வீரர்களுக்கு எதிராக ஒட்டுமொத்த நாடே செயல்படுகிறது.” என்று கேஎல் ராகுல் குறிப்பிட்டார். மற்றொருபுறம் ரவிச்சந்திரன் அஸ்வினும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இவை அனைத்திற்கும் தற்போது பதிலளித்துள்ள சூப்பர் ஸ்போர்ட் நிறுவனம், “உண்மையில் ஹாக்-ஐ தொழில்நுட்பம் எங்களது கையில் இல்லை. ஐசிசி நிர்வாகத்தால் ஒப்புதல் பெற்ற ஒருவரே அதனை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் களத்தில் பவுன்சர் காரணிகளை வைத்து இதன் கணிப்பு இருக்கும். ஆகையால் தனிப்பட்ட ஒருவர் அல்லது ஒரு நிறுவனம் திடீரென இதனை தவறாக பயன்படுத்த இயலாது.
Dean Elgar survives 🤏
Initially given out, he reviewed it, and the decision was overturned. Big moment in the match and the series👀
📺 Stream #SAvIND live: https://t.co/0BMWdennut pic.twitter.com/6EJmtd0Qy3
— SuperSport 🏆 (@SuperSportTV) January 13, 2022
ஐசிசி ஒப்புதல் அளித்ததால் மட்டுமே இத்தனை ஆண்டுகள் மேல்முறையீட்டின் ஒரு அங்கமாக ஹாக்-ஐ தொழில்நுட்பம் இருக்கிறது. இந்திய அணி வீரர்கள் ஆத்திரத்தில் வீண் குற்றச்சாட்டுகளை அடுக்க வேண்டாம்.” என்று சூப்பர் ஸ்போர்ட் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியது. நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தென்ஆப்பிரிக்கா அணி தாண்டிவிட்டதால், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.