இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு ஆபத்து..? என்.ஐ.ஏ எச்சரிக்கை
வங்காளதேச அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
முதல் டி20 கிரிக்கெட் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வருகின்ற 3-ந்தேதி நடக்கிறது. இந்த போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலி மற்றும் இந்திய அணி மீது கேரளா மாநிலம் கோழிக்கோட்டை மையமாக வைத்து இயங்கும் ஆல் இந்தியா லஷ்கர் இயக்கம் தாக்குதல் நடத்த இருப்பதாக என்.ஐ.ஏ.-க்கு பெயரிடப்படாத கடிதம் வந்துள்ளது.

இதனால் போட்டியில் விளையாடும் இந்திய அணிக்கான பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ளும்படி டெல்லி போலீஸ்க்கு என்.ஐ.ஏ. வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடிதத்தில் விராட் கோலி பெயர் இடம் பெற்றிருந்தாலும், அவர் வங்காளதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கடிதத்தில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், உள்துறை மந்திரி அமித் ஷா, அத்வானி, பா.ஜனதா செயல்தலைவர் ஜே.பி. நட்டா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரின் பெயரும் இருந்ததாக டெல்லி போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.