பவுலர்கள் சிறப்பாக வேலையை முடித்துக் கொடுத்தார்கள். பேட்டிங்கில் டு பிளசிஸ் அசத்தினார். வெற்றிக்கு காரணம் யார் யார்? என்று போட்டி முடிந்த பிறகு பேட்டியளித்துள்ளார் விராட் கோலி.
மொகாலியில் நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. இப்போட்டியில் விராட் கோலி ஆர்சிபி அணியின் கேப்டனாக உள்ளே வந்தது பலருக்கும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
பாப் டு பிளசிஸ் இடுப்பு பகுதி தசைப்பிடிப்பு ஏற்பட்டதால், இன்றைய போட்டியில் இம்பேக்ட் பிளேயராக விளையாடுவார். போட்டியின் இரண்டாம் பாதியில் வைஷாக் உள்ளே எடுத்து வரப்படுவார் என்பதால், நான் கேப்டனாக விளையாடுகிறேன் என விராட் கோலி தெரிவித்தார்.
இதனையடுத்து ஆர்சிபி அணிக்கு துவக்க வீரர்களாக விராட் கோலி மற்றும் டு பிளசிஸ் இருவரும் களமிறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 137 ரன்கள் சேர்த்தது. இதில் விராட் கோலி 59 ரன்கள், டு பிளசிஸ் 84 ரன்கள் அடித்து அவுட் ஆகினர் 20 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் அடித்திருந்தது.
அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி பவர்-பிளே ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெடுகளை இழந்து மிகவும் தடுமாற்றம் கண்டது. முகமது சிராஜ் அபாரமாக பந்துவீசி பஞ்சாப் அணியை கதிகலங்க செய்தார். இவர் ஃபீல்டிங்கிலும் ஒரு முக்கியமான ரன் அவுட் செய்து அசத்தினார். இதனால் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜித்தேஷ் சர்மா 41 ரன்கள், துவக்க வீரர் பிரப்சிம்ரன் 46 ரன்கள் அடித்திருந்தனர்.
தற்காலிக கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி பேட்டி அளிக்கையில், “புள்ளிப்பட்டியலில் ஒரு அணி எந்த இடத்தில் இருக்கிறது என்பதை வைத்து அதன் பலம் மற்றும் பலவீனத்தை வரையறுக்க முடியாது. இப்போதுதான் சீசனில் 20 போட்டிகள் முடிந்திருக்கிறது. மெல்ல மெல்ல எங்களது பிழைகளை சரிசெய்து, என்ன செய்தால் சரியாக இருக்கும்? எங்களது திட்டம் என்ன? என்பதை வகுத்து செயல்பட்டு வருகிறோம்.
ஆரம்பத்தில் டு பிளசிஸ் அதிரடியாக விளையாடிய விதம், ஆர்சிபி அணி கூடுதலாக 20-30 ரன்கள் பெறுவதற்கு உதவியது. அணியின் வெற்றிக்கு இது மிகமுக்கிய காரணமாக இருந்தது.
அதன் பிறகு பந்துவீச்சாளர்களிடம் 170 ரன்களுக்கும் மேல் அடித்திருக்கிறோம். இந்த டார்கெட் போதுமானது. பவர்-பிளே ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் எளிதாக ஆட்டத்திற்குள் வந்து, வெற்றியை பெற்று விடலாம் என்றும் பேசினன். அதற்கேற்றவாறு பந்துவீச்சில் அசத்தினார்கள். சிராஜ் ஒவ்வொரு போட்டியிலும் குறிப்பாக பவர்-பிளே ஓவர்களில் முக்கிய பங்களிப்பை கொடுத்து வருகிறார்.” என்றார்.