17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் லீக் போட்டிகளில் பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் அணிகள் வெற்றி பெற்றன.
இந்தியாவில் 17 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் 6-ம் தேதி தொடங்கியது. நேற்றைய 3-வது நாளில் நான்கு லீக் ஆட்டங்கள் நடைபெற்றன.
கவுஹாத்தியில் 5 மணிக்கு தொடங்கிய முதல் லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள நியூ கலிடோனியா – பிரான்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் பிரான்ஸ் 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. பிரான்ஸ் அணியின் அமைன் கவுரி இரண்டு கோல் எடுத்தார். நியூ கலிடோனியா அணியினர், பிரான்ஸ் அணிக்கு இரண்டு சொந்த கோல்களை விட்டுக்கொடுத்தனர்.
கொல்கத்தாவில் 5 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள சிலி – இங்கிலாந்து அணிகள் மோதின. இப்போட்டியில் இங்கிலாந்து 4-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தின் ஜேடன் சஞ்சோ இரண்டு கோல்கள் எடுத்தார்.
கவுஹாத்தியில் 8 மணிக்கு தொடங்கிய லீக் ஆட்டத்தில் ‘ஈ’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஹாண்டுரஸ் – ஜப்பான் அணிகள் மோதின. இப்போட்டியில் ஜப்பான் 6-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வெற்றி பெற்றது. ஜப்பானின் நாகமூரா ஹாட்ரிக் கோல் அடித்தார். இது இந்த தொடரில் அடிக்கப்பட்ட முதல் ஹாட்ரிக் கோலாகும்.
கொல்கத்தாவில் 8 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் ‘எஃப்’ பிரிவில் இடம்பிடித்துள்ள ஈராக் – மெக்சிகோ அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.
இன்று (9-ம் தேதி) நடைபெறும் ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகளில் கானா – அமெரிக்கா, இந்தியா – கொலம்பியா அணிகளும், ‘பீ’ பிரிவு லீக் போட்டிகளில் துருக்கி – மாலி, பராகுவே – நியூசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை செய்கின்றன.