இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நேற்று டெல்லி பெரஸ் ஷா கோட்லா மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட் விட்டாலும், அடுத்து வந்த விராட் கோலி முரளி விஜயுடன் சேர்ந்து இலங்கை அணி பந்து வீச்சை துவம்சம் செய்தது.


முரளி விஜய் அடித்த பந்தில் காயமடைந்த இலங்கை வீரர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்தார்.
டெஸ்ட் போட்டிகளில் கோலியின் இருபதாவது சதம் இதுவாகும். கோலி 171 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 30 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று முரளி விஜய் அடித்த பந்து பட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா காயமடைந்தார். 30 வது ஓவரில் தில்ருவான் பெரேரா வீசிய பந்தை, ஸ்வீப்ட் ஷாட் அடித்தார் முரளி விஜய். அருகில் நின்ற சமரவிக்ரமாவின் நெற்றியில் பந்து தாக்கியது.
அவர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அவர் ஆபாய கட்டத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.