“2019 உலகக்கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்குமுன் இரவு…” யாரும் அறிந்திராத தகவலை கூறிய விஜய் ஷங்கர்!
2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு முன் இரவு நடந்தது இதுதான் என சுவாரஷ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் இந்திய வீரர் விஜய் ஷங்கர்.
கிரிக்கெட் உலகில் மிகவும் சுவாரஸ்யம் நிறைந்த ஒரு போட்டி என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது இந்தியா – பாகிஸ்தான் போட்டி தான். அந்த அளவிற்கு இரு அணிகளுக்கும் இடையே அனல்பறக்கும் ஆட்டம் நடைபெறும். இந்த இரு அணிகளும் மோதிக் கொள்வது போட்டியாக பார்க்காமல், அது ரசிகர்களுக்கு ஒரு உணர்வாக அமையும்.
கடந்த பல ஆண்டுகளாக இரு அணிகளுக்கும் இடையிலான தனிப்பட்ட தொடர் நடைபெறாமல் இருந்து வருகிறது. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே இந்த இரு அணிகளும் மோதிக் கொள்கின்றன.
இந்நிலையில் கடைசியாக 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரு அணிகளும் மோதிக் கொண்டன. அந்த போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா (140 ரன்கள்) சதம் விளாசினார். இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் இம்முறையும் பாகிஸ்தானை வெல்ல விடாமல், உலகக்கோப்பையில் தொடர்ச்சியான வெற்றியை பதிவு செய்தது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் முதல் முறையாக பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த விஜய்சங்கர். இந்த போட்டியில் கிடைத்த அனுபவத்தையும், போட்டிக்கு முன் இரவு நடந்த சுவாரசியமான ஒரு நிகழ்வையும் பகிர்ந்துகொண்டார்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டியைப்பற்றி பேசிய விஜய் சங்கர், “நான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடுகிறேன் என்பது முந்தைய நாள் தான் எனக்கு தெரியும். அன்றைய நாள் நாங்கள் சில வீரர்கள் ஒன்றாக ட்ரெஸ்ஸிங் ரூமில் பேசிக்கொண்டிருந்தோம். நீண்டநேரம் ஆனதால் அனைவரும் சேர்ந்து காஃபி குடிக்க வெளியே சென்றோம். அந்த கடையில் இருந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் எங்களைப் பார்த்து படுமோசமாக திட்டினார்.
நாங்கள் எதுவும் பேசாமல் மவுனமாக இருந்தோம். அவரது வசைகளை வாங்கி கொண்டிருந்தோம். எங்களை திட்டுவதை ரெக்கார்டு செய்துவைத்தார். அவர் என்னதான் செய்கிறார் என்று நாங்கள் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்தோம். அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்போதுதான், இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றால், எனக்கு என்னவென்பதே புரிந்தது என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டியை வென்றபிறகு புதிய அனுபவம் தந்ததாகவும் விஜய் ஷங்கர் பகிர்ந்துகொண்டார்.