ரஞ்சி கோப்பைக்கு செல்லும் தமிழக அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. முக்கிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட வில்லை. அதற்கான காரணம் இதுதான் என்று கூறப்பட்டு வருகிறது.
ரஞ்சிக் கோப்பை 2021/22 சீசனில் பங்கேற்கும் தமிழக அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு விஜய் சங்கர் தலைமை ஏற்கிறார். 3 இளம் வீரர்கள் புதிதாக சேர்க்கப்பட்டிருக்கின்றனர். அதேநேரம் மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் இருவரும் இந்த அணியில் சேர்க்கப்படவில்லை. விஜய் ஹசாரே தொடரில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். ஆனால் அவரை ரஞ்சி கோப்பையில் எடுக்கவில்லை.
சையது முஸ்தக் அலி தொடரில் விளையாடிய நடராஜன், விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி கோப்பை இரண்டு தொடர்களிலும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து தமிழக அணியில் இவருக்கான இடம் மறுக்கப்பட்டு வருவதால், ரசிகர்கள் பலர் தமிழக அணியின் தேர்வுகுழு மீது விமர்சனத்தை முன் வைத்திருக்கின்றனர்.

மேலும் திட்டமிட்டே நடராசன் ஓரங்கட்டப்படுவதாக விமர்சனங்கள் வந்த நிலையில் இதுகுறித்து தமிழக தேர்வுக்குழு அதிகாரி ஒருவர் பேட்டியளித்துள்ளார். அவர் கூறுகையில்,
“சையது முஸ்தக் அலி தொடருக்கு முன்பாக நடராஜன் காயத்திலிருந்து குணமடைந்து வந்தார். ஆனாலும் அந்த தொடரில் அவரால் முழுமையாக பந்து வீச முடியவில்லை. அதன் காரணமாக விஜய் ஹசாரே தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. பின்னர் ரஞ்சி கோப்பை தொடரில் அவர் குணமடைந்து விடுவார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவரது செயல்பாடு திருப்தியளிக்கவில்லை என்பதால், வேறு புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்.” என்றார்.

ரஞ்சி கோப்பையில் பங்கேற்கும் தமிழக அணி:
விஜய் சங்கர் (கேப்டன்), எம்.எஸ். வாஷிங்டன் சுந்தர் (துணை கேப்டன்), பி. இந்திரஜித், பி. அபராஜித், என். ஜெகதீசன், எம். ஷாருக் கான், பி. சாய் சுதர்சன், பிரதோஷ் ரஞ்சன் பால், எல். சூர்யபிரகாஷ், எம். கௌசிக் காந்தி, வி. கங்கா ஸ்ரீதர் ராஜு, சந்தீப் வாரியர், எம். முகமது, ஆர். சிலம்பரசன், பி. சரவண குமார், ஏ. அஸ்வின் கிறிஸ்ட், எல். விக்னேஷ், ஆர். சாய் கிஷோர், எம். சித்தார்த், ஆர். கவின்
தமிழக அணி தனது முதல் ரஞ்சி போட்டியை ஜம்மு-காஷ்மீர் அணிக்கு எதிராக அகமதாபாத் மைதானத்தில் விளையாட உள்ளது.