இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வேகப்பந்து வீச்சாளரான வினய் குமார் திடீரென இன்று ஓய்வை அறிவித்துள்ளார்.
முதல்தர போட்டியில் கடந்த 2004ம் ஆண்டு அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் வினய் குமார், கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் இந்திய அணியிலும் கால் பதித்தார். ஒரு டெஸ்ட் போட்டியிலும், 9 டி.20 போட்டியிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ள வினய் குமார் கடந்த சில வருடங்களாகவே இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்தார்.

முதல் தர போட்டிகளில் இதுவரை 504 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள வினய் குமார், ஐபிஎல் டி.20 தொடரில் கோச்சி டஸ்கர்ஸ் கேரளா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மும்பை இந்தியஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் போன்ற அணிகளுக்காக விளையாடி அதில் 105 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
கடந்த இரண்டு வருடங்களாக ஐபிஎல் தொடரில் இருந்தும் புறக்கணிக்கப்பட்ட வினய் குமார், இன்று திடீரென தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம், முதல்தர மற்றும் சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
Thankyou all for your love and support throughout my career. Today I hang up my boots. 🙏🙏❤️ #ProudIndian pic.twitter.com/ht0THqWTdP
— Vinay Kumar R (@Vinay_Kumar_R) February 26, 2021
தனது ஓய்வு அறிவிப்பை இரண்டு பக்க கடிதமாக வெளியிட்டுள்ள வினய் குமார், இந்திய அணியுடனான தனது பயணம் குறித்து பல்வேறு விசயங்களை உருக்கமாக பகிர்ந்துள்ளார். அதே போல் தனது கிரிக்கெட் கேரியருக்கு உதவியாக இருந்த அனைவருக்கும் வினய் குமார் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, முதல் ஐபிஎல் தொடரின் கதாநாயகனான யூசுப் பதானும் இன்று (26.02.21) மதியம் திடீரென ஓய்வை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.