ஆக்ரோஷத்துக்கு பெயர் பெற்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, மிக முக்கியமான தென் ஆப்பிர்க்க தொடரிலும் ஆக்ரோஷமே கைகொடுக்கும் என்று கூறியுள்ளார்.
பேட்டிங், கேப்டன்சியில் ஆக்ரோஷமாக ஆடி வரும் விராட் கோலி நாக்பூர் டெஸ்ட் போட்டியில் 267 பந்துகளில் 213 ரன்கள் எடுத்தார்.
இந்நிலையில் நாக்பூர் டெஸ்ட்டில் வென்ற பிறகு பரிசளிப்பு நிகழ்ச்சியின் போது கூறியதாவது:
நான் இப்படித்தான் ஆட விரும்பினேன் அப்படியே ஆடினேன். ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வது முக்கியம். விரைவாக ரன் குவித்தால்தான் எதிரணியினரை வீழ்த்த பவுலர்களுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.
அயல்நாடுகளிலும் இத்தகைய அணுகுமுறை தேவை, அதனை எதிர்நோக்குகிறேன். பெரிய சதங்கள் மூலம் என் ஆட்டத்தை நான் மேம்படுத்த எப்போதும் விரும்புகிறேன். இதற்குக் காரணம் அணியின் பயன் தவிர வேறில்லை.
The third Test cricket match between India and Sri Lanka starts in Pallekele on August 12. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
சதம் அடித்த பிறகு கவனம் சிதறினால் ஓரிரு விக்கெட்டுகளை விரைவில் இழந்து விட வாய்ப்புள்ளது. நன்கு நிலைத்த பேட்ஸ்மென் புதிதாக களமிறங்குவோரைக் காட்டிலும் விரைவில் ரன் எடுக்க முடியும். ஆகவே இந்த முறைகளிலேயே நான் சிந்திக்கிறேன், என்னுடைய உடல் தகுதி நீண்ட நேரம் நான் பேட் செய்ய உதவுகிறது.
புஜாரா சீராக ஆடிவருகிறார், விஜய் சிறிது இடைவெளிக்குப் பின் ஆடுகிறார், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதை விஜய் பெருமையாகக் கருதுகிறார். அணிக்கு வெளியே இருப்பது அவரைக் காயப்படுத்தும் என்பது எனக்குத் தெரியும், ஆனால் அவர் மீண்டும் நல்ல முறையில் வந்துள்ளார்.
ரோஹித் சர்மாவும் எதிர்காலத்துக்காக தன் நிலையை இன்னும் வலுவாக்கியுள்ளார். அணிச்சேர்க்கைப் பற்றி பேசும்போதெல்லாம் ரோஹித் பெயரைப் பரிசீலிப்போம்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்குப் பாராட்டு:
புவனேஷ்வர் குமார் இந்தியாவுக்காக கடந்த சில மாதங்களில் நிறைய போட்டிகளில் ஆடிவிட்டார். இசாந்த், ஷமி, உமேஷ் அதிகம் ஆடவில்லை. ஆனாலும் இவர்கள் முதல் தர கிரிக்கெட்டில் நிறைய ஓவர்களை வீசுகின்றனர். .அது அவர்களின் ரிதத்துக்கு முக்கியம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இந்தப் பிட்சில் கூட இவர்கள் மிகச்சிறப்பாகவே வீசினர். ஸ்பின்னர்கள் போட்டியை வென்று கொடுத்தாலும் இசாந்த் சர்மா பந்து வீச்சு தனித்து நிற்கிறது.
தென் ஆப்பிரிக்கா தொடருக்கு நன்றாகத் தயாரிப்பில் ஈடுபட விரும்புகிறோம், அதனால்தான் பசுந்தரை ஆடுகளத்தைக் கேட்டோம். நாக்பூர் பிட்ச் 2-ம் நாளிலேயே உடைந்து விட்டது. கொல்கத்தா பிட்ச் சரியான பிட்ச் ஆகும்.
இவ்வாறு கூறினார் விராட் கோலி.