எனது ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்வில் மூன்று போட்டிகளை என்னால் மறக்கவே முடியாது என்று மனம்திறந்து பேசியுள்ளார் விராட் கோலி.
இந்திய அணியின் முன்னணி வீரர் மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங்கில் பல சாதனைகளை படைத்து, கேப்டனாகவும் பல வெற்றிகளை பெற்றுத்தந்தார்.
2019ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு, கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களாக சர்வதேச போட்டிகளில் சதமடிக்க முடியாமல் திணறி வந்த விராட் கோலி, 2022ஆம் ஆண்டு ஆசியகோப்பையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், டி20 போட்டியில் முதல் சதமடித்து நீண்ட காலமாக சதமடிக்காமல் இருந்ததை சரி செய்தார். அதன் பிறகு ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டியிலும் சதத்தை பூர்த்தி செய்து சர்வதேச கிரிக்கெட்டில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ளார்.
15 வருடங்களாக ஐபிஎல் போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியாத அவப்பெயரும் விராத் கோலியிடம் இருக்கிறது. இந்த வருடம் எப்படியாவது அந்த வறட்சியை சரி செய்து கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் ஆர்சிபி அணி இருக்கிறது.
ஏபிடி வில்லியர்ஸ் விராட் கோலியை சமீபத்தில் பேட்டி எடுத்தார் அந்த பேட்டியில் சர்வதேச போட்டிகள் மற்றும் ஐபிஎல் போட்டிகள் குறித்து உரையாடல்கள் நிகழ்ந்தது. அதன் பிறகு தன்னுடைய இத்தனை வருட கிரிக்கெட் வாழ்வில் மறக்க முடியாத போட்டிகள் எது? என்று கேட்கப்பட்டதற்கு, மூன்று போட்டிகளை விராட் கோலி குறிப்பிட்டார்.
“2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் களமிறங்கியபோது ரசிகர்கள் கொடுத்த ஆரவாரம் என்னால் எப்போதும் மறக்க இயலாது. 2016ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் மைதானத்தில் குவிந்த ரசிகர்களின் சப்போர்ட், அதன் பிறகு கடந்த அக்டோபர் 22ஆம் தேதி டி20 உலககோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இறுதிவரை நின்று விளையாடியதுபோது மைதானத்தில் ரசிகர்கள் ஏற்படுத்திய அதிர்வலை என இந்த மூன்று போட்டிகளையும் என் வாழ்வில் மறக்கவே முடியாது.” என்று குறிப்பிட்டார்.