சென்னை அணிக்காக விளையாட வேண்டும்; இளம் நியூசிலாந்து வீரர் விருப்பம்
நியூஸிலாந்து அண்டர்-19 நட்சத்திர கிரிக்கெட் வீரரான 17 வயது ஆதித்யா அசோக் தமிழ்நாட்டின் வேலூரைப் பூர்விகமாகக் கொண்ட இந்திய வம்சாவளி வீரர் ஆவார்.
வேலூரில் பிறந்த இவரது தாயார் ஒரு நர்ஸ். நியூஸிலாந்துக்கு ஆதித்யா அசோக் குடும்பம் வந்த போது அசோக்கின் வயது 4 மட்டுமே. இவரது தந்தை இவரிடத்தில் கிரிக்கெட் ஆசை எனும் விதையை விதைத்துள்ளார். வீட்டின் கொல்லைப் புறத்தில் கிரிக்கெட் பிட்ச் அமைத்துக் கொடுத்துள்ளார் தன் மகனுக்காக.
மிகச்சிறந்த லெக் ஸ்பின்னராக உருவாகி வரும் ஆதித்யா அசோக் 2015-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த உள்ளரங்க யு-13 கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து கேப்டனாக இருந்துள்ளார்.

இவருக்கு தருண் நெதுல்லா என்பவர் லெக் ஸ்பின் பயிற்சியளிக்கிறார்.
ஆதித்யா அசோக்கிற்கு இரண்டே இரண்டு லட்சியங்கள்தான் வாழ்க்கையில் உள்ளது, ஒன்று நியூஸிலாந்துக்காக டெஸ்ட் போட்டிகளில் ஆட வேண்டும், ஐபிஎல் கிரிக்கெட்டில் தோனியின் கீழ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆட வேண்டும் என்பதே.
தான் கேன் வில்லியம்சனை மிகவும் விரும்புவதாகக் கூறும் ஆதித்யா அசோக் தன் ரோல் மாடல் சுவிஸ் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தான் என்றார்.