2019ம் ஆண்டு உலகக்கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்லும்; வக்கார் யூனிஸ் நம்பிக்கை
2019-ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வெல்ல வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த தோல்வியால் பாகிஸ்தான் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறுவது கடினம் எனக் கூறப்பட்டது. ஆனால், அதன்பின் தோல்வியை சந்திக்காமல் இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இதில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

இந்நிலையில் அடுத்த வருடம் இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையையும் பாகிஸ்தான் அணி கைப்பற்ற வாய்ப்புள்ளதாக வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்கார் யூனிஸ் கூறுகையில் ‘‘சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து பாகிஸ்தான் அணியை பார்க்கும்போது, பாகிஸ்தான் அணி, தனது மீதான உறுதியை கட்டமைத்துக் கொண்டே வருகிறது. இதன்மூலம் நம்பிக்கை வந்து கொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் அணி உலகக்கோப்பை தொடரை வெல்ல வாய்ப்புள்ளது என்பதை என்னால் நியாயமான அளவிற்கு சொல்ல முடியும். நெருக்கடி இருக்கத்தான் செய்யும். நாடு முழுவதும் எதிர்பார்ப்பு இருக்கும்.
இங்கிலாந்தில் ஏராளமான பாகிஸ்தானியர்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் மைதானத்திற்குச் சென்று சென்று அணிக்கு ஆதரவு அளிப்பார்கள். ஆதராளவர்கள் அதிகமான அளவு மைதானத்திற்கு வருவதால் நெருக்கடி உருவாகும்’’ என்றார்.