இந்தியா மற்றும் இலங்கை இடையிளான முதல் டெஸ்ட் போட்டி முடிந்தவுடன் கொலக்த்தாவில் உடல் ஊனமுற்ற தனது ரசிகர் ஒரு வரை சந்த்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அந்த வீடியோ காட்சி இந்த கட்டூரையின் இறுதியில் உள்ளது.
இலங்கை அணிக்கு எதிராக கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தை பரபரப்பாக மாற்றியதில் விராட் கோலிக்கு முக்கிய பங்கு உண்டு. தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் சதம் அடித்ததுடன் இலங்கை அணிக்கு தோல்வி பயத்தையும் உருவாக்கினார்.
2-வது இன்னிங்ஸில் ஷிகர் தவண், கே.எல்.ராகுல் ஜோடி வலுவான தொடக்கம் அமைத்துக் கொடுத்த போதிலும் கடைசி நாள் ஆட்டத்தின் முதற் பகுதியில் இலங்கை அணியின் கையே ஓங்கியிருந்தது. ராகுல் 79, புஜாரா 22, ரஹானே 0, ஜடேஜா 5 ரன்களில் நடையை கட்ட நெருக்கடி உருவானது.
ஜடேஜா விக்கெட்டை இழக்கும் போது ஸ்கோர் 249 ஆக இருந்தது. வெறும் 127 ரன்களே முன்னிலையாக இருந்த நிலையில் விராட் கோலி 58 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் தான் இருந்தார். இந்த சூழ்நிலையில், எதிர்முனையில் உள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்த இலங்கை திட்டமிட்டது.
அவர்கள் எண்ணப்படி அஸ்வின் 7, விருத்திமான் சாஹா 5, புவனேஷ்வர் குமார் 8 ரன்களில் சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர். எனினும் இவர்கள் விராட் கோலியுடன் இணைந்து சுமார் 20 ஓவர்கள் களத்தில் நிலைத்து நின்றனர். இந்த இடைப்பட்ட ஓவர்களில் விராட் கோலி, விரைவாக ரன்கள் சேர்த்தார்.
அற்புதமாக பந்து வீசிக் கொண்டிருந்த சுரங்கா லக்மலுக்கு எதிராக எக்ஸ்டிரா கவர் திசையில் விளாசிய இரு அற்புதமான சிக்ஸர்கள் விராட் கோலி பேட்டிங்கின் மற்றுமொரு பரிமாணத்தை வெளிப்படுத்தியது. 119 பந்துகளில், 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்களுடன் 104 ரன்கள் விளாசிய அவர், இலங்கை அணியின் கட்டுப்பாட்டில் இருந்த ஆட்டத்தின் போக்கை மாற்றினார். இதனால் இந்திய அணியை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க செய்ய நினைத்த இலங்கை அணியின் கனவு தகர்ந்தது.
டெஸ்ட்டில் விராட் கோலி குறைந்த பந்துகளில் அடித்த சதமாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் 2014-ம் ஆண்டு வெலிங்டனில் நியூஸிலாந்துக்கு எதிராக 129 பந்துகளில் சதம் அடித்திருந்தார். அனைத்து வடிவிலான கிரிக்கெட்டிலும் விராட் கோலி 50 சதங்களை (டெஸ்ட் 18, ஒருநாள் போட்டி 32) அடித்துள்ளார். அவரது சாதனை சதத்தை தொடர்ந்து குறைந்தது 49 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இலங்கை அணிக்கு 231 ரன்களை இலக்காக கொடுத்தது இந்திய அணி.
புவனேஷ்வர் குமார் 4 விக்கெட்களும், முகமது ஷமி 2 விக்கெட்களும், இவர்களுக்கு உறுதுணையாக செயல்பட்ட உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்த இலங்கை அணி 75 ரன்களுக்கு 7 விக்கெட்களை இழந்து தோல்வியின் விளிம்பில் இருந்தது. இந்திய அணி வெற்றிக்கு அருகில் இருந்த நிலையில் போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் ஆட்டம் டிரா ஆனது.