இந்த வெற்றிக்கு நாங்கள் தகுதி இல்லை; விராட் கோஹ்லி சொல்கிறார்
தென் ஆப்ரிக்கா அணியுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி விளக்கமளித்துள்ளார்.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்ரிக்கா அணியுடன் ஆறு ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகள் முடிவில் மூன்று போட்டியிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கோஹ்லி 45 ரன்களும், தவான் 109 ரன்களும், தோனி 42 ரன்களும் எடுத்து கைகொடுத்தன் மூலம் 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 289 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து 290 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை தென் ஆப்ரிக்கா அணி துரத்தி கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டதால், போட்டியின் ஓவர்கள் 28ஆக குறைக்கப்பட்டு வெற்றி இலக்கும், 202 ஆக குறைக்கப்பட்டது. தென் ஆப்ரிக்கா பேட்ஸ்மேன்களுக்கு இது சாதகமாக அமைந்துவிட்டதால், இந்த போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
போட்டியின் முடிவை தொடர்ந்து பேசிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி “இந்த வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா அணி நிச்சயம் தகுதியானது தான்” என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், இந்த போட்டி டி.20 போட்டி போலவே நடைபெற்றது. ஆட்டத்தின் முதல் பாதியை விட இரண்டாவது பாதியில் மைதானத்தின் தன்மை ஒட்டுமொத்தமாக மாறியது. இதன் காரணமாக இரண்டாவது இன்னிங்ஸில் சுழற்பந்து வீச்சு எடுபடவில்லை. மழை குறுக்கிட்டதால் போட்டியின் ஓவர்கள் மற்றும் இலக்கு குறைக்கப்பட்டது தென் ஆப்ரிக்கா அணிக்கு சாதமாக அமைந்துவிட்டது, இந்த வெற்றிக்கு தென் ஆப்ரிக்கா அணி முழு தகுதியான அணி தான், எங்களுக்கு அந்த வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் மிக முக்கிய நேரத்தில் நோ பால் போட்டு சொதப்பிய சாஹல் மற்றும் கடைசி கட்டத்தில் ரன்களை வாரி வழங்கிய குல்தீப் யாதவ், ஆகியோர் தங்களால் முடிந்தவரை சிறப்பாகவே செயல்பட்டனர். என்றும் மைதானத்தில் இருந்த ஈரப்பதத்தால் அவர்களின் சுழல் எடுபடவில்லை என்றும் கோஹ்லி தெரிவித்துள்ளார்.