இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டியை 1-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. இதனையடுத்து, ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. தர்மசாலாவில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. தோனியை தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 29 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் விழுந்தது. தோனி 65 ரன்கள் எடுத்ததால் இந்திய அணி 112 என்ற கவுரமான ஸ்கோர் எடுத்தது. இந்திய அணி படுதோல்வி அடைந்து கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இதனையடுத்து மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா இரட்டை சதம் விளாசினார். ஷிகர் தவான் 68, ஸ்ரேயாஸ் 88 ரன்கள் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுத்தது. இதனையடுத்து நாளை இரு அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி விசாகபட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் துவக்க வீரர் ஷிகர் தவன், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்நிலையில், தர்மசாலா ஒருநாள் போட்டி மற்றும் கொல்கத்தா டெஸ்ட் போட்டிகளில் இருந்து பேட்ஸ்மேன்கள் தங்களது தவறுகளில் இருந்து கற்றுக் கொள்கிறார்கள் என்று ஷிகர் தவான் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், “முதல் ஒருநாள் போட்டியில் இருந்து மீண்டு வந்து, இரண்டாவது போட்டியில் விக்கெட் விளாமல் பார்த்துக் கொண்டோம். எங்கள் மீதான அழுத்தத்தை அழகாக எதிர்கொண்டோம். 10 ஓவர்களுக்கு பின்னர் ஆட்டத்தின் தன்மை மாறியது. ரோகித் சர்மா எப்பொழுதும் ஒரிரு போட்டிகளுக்கு தான் கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைக்கிறது. அவர் ஒரு சிறப்பான கேப்டன்” என்றார்.
எப்போதும் போன்று அந்தப் போட்டிகளிலும் நேர்மறையான எண்ணங்களுடன் மட்டுமே களமிறங்கினோம். சில நேரங்களில் சரிவுகள் நமக்கு நிறைய கற்றுக்கொடுக்கும்.
இதுபோன்ற சூழ்நிலைகள் பழக்கப்பட்டவைதான். இந்திய அணி மிகப் பலம் வாய்ந்த அணி. வீரர்கள் அனைவரும் முழு தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். எந்த ஒரு போட்டியிலும் ஒரே மாதிரியான மனநிலையுடன் தான் களமிறங்குகிறோம்.
இந்திய அணிக்கென்று தனித்தன்மை உள்ளது. வீரர்கள் அந்த சூழ்நிலைக்கு பழகிவிட்டால் பிறகு எந்த ஒரு அணியாக இருந்தாலும் துவம்சம் செய்து எளிதில் வெற்றிபெற்று விடுவோம் என்றார்.