இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வியை சந்திக்க காரணம் என்னவென்று போட்டி முடிந்தபிறகு அளித்த பேட்டியில் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி டாசை இழந்து, முதலில் பேட்டிங் செய்ய ஆஸ்திரேலியா அணியால் பணிக்கப்பட்டது. முதல் போட்டியில் இல்லாத ரோகித் சர்மா இப்போட்டியில் இடம்பெற்றார்.
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இடதுகை வேகப்பந்து வீச்சாளர்களிடம் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருந்திருக்கிறது. இன்றைய போட்டியிலும் அந்த பிரச்சனை நீடித்தது.
முதல் ஓவர்லையே சுப்மன் கில் டக்அவுட் ஆகி வெளியேறினார். அதன்பிறகு வரிசையாக ரோகித் சர்மா(13), சூரியகுமார் யாதவ்(0), கேஎல் ராகுல்(9) ஆகியோர் மிச்சல் ஸ்டார்க்கிடம் அடுத்தடுத்த சில ஓவரில் ஆட்டம் இழந்தனர். ஹர்திக் பாண்டியாவும் உள்ளே வந்த வேகத்தில் வெளியேற பத்து ஓவர்களுக்குள் 49 ரன்களுக்கு 5 விக்கெடுகளை இழந்து படுமோசமான நிலைக்கு இந்திய அணி தள்ளப்பட்டது.
கீழ் வரிசையில் ரவீந்திர ஜடேஜா(16) சிறிது நேரம் தாக்குப் பிடிக்க, அக்சர் பட்டேல்(29*) இறுதிவரை போராடியது எடுபடவில்லை. 117 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிட்ச்சல் ஸ்டார்க் ஐந்து விக்கெட்களையும், சீன் அபாட் மூன்று விக்கெட்டுகளையும், நாதன் எல்லீஸ் இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
எளிய இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா அணி இம்முறை இன்னும் பயங்கரமான துவக்கத்தை பெற்றது. துவக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், மிச்சல் மார்ஷ் இருவரும் களமிறங்கி முதல் ஓவரில் இருந்தே இந்திய பவுளர்களை திணறடித்தனர்.
இந்திய அணி விளையாடியதற்கு அப்படியே தலைகீழாக இவர்கள் விளையாடியது இருந்தது. ஒவ்வொரு ஓவரிலும் பௌண்டரி மற்றும் சிக்ஸர்களாக விளாசினர். பத்து ஓவர்களிலேயே 112 ரன்களை விக்கெட் இழப்பின்றி எட்டியது இந்த ஜோடி. இறுதியில் 11 ஓவர்களில் 121 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டிராவிஸ் ஹெட் 51 ரன்கள் மிச்சல் மார்ஷ் 66 ரன்கள் (6பவுண்டரி, 6 சிக்ஸர்) அடித்திருந்தனர்.
போட்டி முடிந்த பிறகு இந்திய அணியின் இத்தகைய படுதோல்விக்கு என்ன காரணம் என்பதை மனம்விட்டு பேசியிருந்தார் கேப்டன் ரோகித் சர்மா. அவர் கூறியதாவது:
“போட்டியை இழப்பது சற்று ஏமாற்றம் அளிக்கிறது. பேட்டிங்கில் எங்களது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகும் அளவிற்கு இந்த பிட்ச் மோசமாக இல்லை. நடுவில் வரிசையாக நிறைய விக்கெட்டுகளை இழந்ததால், ரன் அடிக்க முடியாமல் திணறியதுதான் இவ்வளவு குறைவான ஸ்கோருக்கு காரணம்.
முதல் ஓவரில் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு, விரைவாக 30-35 ரன்களை நானும் விராத் கோலியும் அடித்தோம். நான் அவுட்டான பிறகு, பின்னர் வந்த வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை விட்டதால் பின்னடைவை சந்தித்தோம். துவக்கத்திலேயே நிறைய விக்கெட்டுகளை இழந்தால் ஆட்டத்திற்குள் மீண்டும் வருவது சற்று கடினம் தான். இன்றைய நாள் எங்களுக்கானது அல்ல.
மிட்ச்சல் ஸ்டார்க் தரமான பவுலர். காலம்காலமாக ஆஸ்திரேலியா அணிக்கு புது பந்தில் இதனை செய்திருக்கிறார். அவரது பலம் இதுதான். புதிய பந்தை அபாரமாக ஸ்விங் செய்து பேட்ஸ்மேன்களை திணறடித்தார். மிட்ச்சல் மார்ஷ் பேட்டிங் செய்து வரும் விதம் உச்சத்தில் இருக்கிறது. அதீத ஆற்றலுடன் பந்துகளை அடிக்கிறார். நிச்சயம், பவராக பேட்டிங் செய்யும் வீரர்களில் உலகில் முதல் மூன்று இடங்களுக்குள் இவர் இருப்பார்.” என்று ரோகித் சர்மா பேசினார்.