பேட்ஸ்மேன்கள் 200 ரன்கள் அடித்துக் கொடுத்தது போதுமானது. தவறு நடந்தது இந்த இடத்தில் தான் என்று பேசியுள்ளார் மகேந்திர சிங் தோனி.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிய போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் வெறும் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 200 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர் டெவான் கான்வே 92 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. அதை பயன்படுத்திக்கொண்டு மிடில் பேட்ஸ்மன்களும் தங்களது அதிரடியை வெளிப்படுத்தி நம்பிக்கை கொடுக்க, கடைசியில் வந்த வீரர்கள் போட்டியின் கடைசி பந்தில் இலக்கை எட்டி பஞ்சாப் கிங்ஸ் அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவி செய்தனர். அதிகபட்சமாக பிரப்சிம்ரன் 42 ரன்கள், லியம் லிவிங்ஸ்டன் 40 ரன்கள் அடித்தனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி போட்டியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இழந்த பிறகு சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
“போட்டியில் என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு தயாராகி வருவது அவசியமானது. கடைசி சில ஓவர்கள் நாங்கள் 10-15 ரன்கள் கூடுதலாக அடித்திருக்க வேண்டும். ஏனெனில் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சிற்கு அப்படிப்பட்ட கூடுதல் ரன்கள் தேவை.
எங்களுடைய பேட்ஸ்மேன்கள் தொடர்ச்சியாக ரன்களை அடித்து வருகிறார்கள். இப்போட்டியில் அடித்த 200 ரன்கள் போதுமானதாக இருந்தது என்று நினைக்கிறேன். ஆனால் நாங்கள் ஒன்று இரண்டு ஓவர்கள் தவறாக வீசிவிட்டோம். எங்களுக்கு இந்த கண்டிஷன் நன்கு தெரியும். ஆனால் அதற்கு ஏற்றவாறு சரியாக பந்து வீசவில்லை.
எதிரணி பேட்ஸ்மேன்கள் உங்களுடைய பந்தை அடிக்க வேண்டாம் என்று நினைக்கின்ற திசையில் அடித்துவிட்டால், என்ன பிரச்சனை இருக்கிறது என்பதை பாருங்கள். தவறு உங்களுடைய திட்டத்திலா? அல்லது அதை செயல்படுத்திய விதத்திலா? என்பதை கவனியுங்கள். இன்றைய போட்டியில் பத்திரனா மிகச்சிறப்பாக பந்துவீசினார். முதல் ஆறு ஓவர்களில் இன்னும் நாங்கள் நன்றாக செயல்பட்டு இருக்கலாம். சரியான லைனில் பந்து வீசி இருக்கலாம்.” என்றார்.