கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கேப்டன்; அதிர்ச்சியில் ரசிகர்கள்
வங்கதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான தொடருக்குப் பின், அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஹேமில்டன் மசகாட்ஸா தெரிவித்துள்ளார்.
வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக வரும் 13-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை ஜிம்பாப்வே டி20 முத்தரப்பு தொடரில் விளையாடுகிறது.

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் கூறுகையில், “வங்கதேசத்தில் நடக்கும் டி20 முத்தரப்பு தொடர் முடிந்த பின், ஹேமில்டன் மசகாட்ஸா அனைத்துவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளது.
வலதுகை பேட்ஸ்மேனான மசகாட்ஸா கடந்த 2001-ம் ஆண்டு தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கினார். இதுவரை 38 டெஸ்ட் போட்டிகள், 209 ஒருநாள் போட்டிகள், 62 டி20 போட்டிகளில் விளையாடி மொத்தமாக 10 சதங்கள், 42 அரை சதங்கள் உள்பட 9,410 ரன்கள் குவித்துள்ளார்.
'It has been an ernomous privilege to have played for and captained my country and this is one of the hardest decisions I have had to make.' — @ZimCricketv captain Hamilton Masakadza, announcing his retirement from international cricket #ThankYouHami #Legend pic.twitter.com/HfM4ph0lvn
— Zimbabwe Cricket (@ZimCricketv) September 3, 2019
ஜிம்பாப்வே அணிக்கு சமீபத்தில் ஐசிசி விதித்த தடைக்குப் பின் சாலமன் மையர் ஓய்வு அறிவித்தார். இப்போது, மசகாட்ஸா ஓய்வை அறிவித்துள்ளார்.
ஜூலை மாதம் நடந்த ஐசிசி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, “ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியம் சுதந்திரமான ஜனநாயக முறையில் தேர்தலை நடத்தவில்லை என்று கூறி சஸ்பெண்ட் செய்து, ஐசிசி போட்டிகளில் பங்கேற்கத் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.