உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் லீக் சுற்று முடிவடைந்து நாக் அவுட் சுற்று நடைபெற்று வருகிறது. இதில் உருகுவே அணியிடம் போர்ச்சுக்கல் அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
நேருக்கு நேர்
இரு அணிகளும் இதுவரை 2 ஆட்டத்தில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் போர்ச்சுகல் வெற்றி பெற்றது. இன்னொரு ஆட்டம் டிரா ஆனது. ஆனால் உலக கோப்பையில் இவ்விரு அணிகளும் இடையிலான போட்டியானது இதுவே முதல் முறையாகும்.
துவக்கம் முதலே பரபரப்பு
ஆட்டம் பரபரப்பாக தொடங்கிய நேரத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் அபாரமாக விளையாடினர். இதில் உருகுவே அணியின் சார்பில் நட்சத்திர வீரர் எடின்சன் கவானி தனது முதல் கோலை பதிவு செய்து அசத்தினார்.
கிறிஸ்டியானா ரொனால் டோ தலைமையிலான போர்ச்சுகல் அணியினரின் கோல் போடும் முயற்சி பலன் அளிக்காமல் போனது. இதனால் முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 1-0 என்ற கோல் கணக்கில் உருகுவே அணி முன்னிலை பெற்றிருந்தது.
அனல் பறந்த இரண்டாம் பாதி
அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதி ஆட்டத்தில் அனல் பறந்தது. இதில் போர்ச்சுகல் அணியின் சார்பில் பெபெ ஒரு கோல் அடித்து ஆட்டத்தினை சமன் செய்தார். அவரைத் தொடர்ந்து உருகுவே வீரர் எடின்சன் கவானி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
மீண்டும் கோல் அடித்து அணியை முன்னிலை பெற வைக்க போர்ச்சுகல் அணியினர் போராடினர். உருகுவே அணியினரின் சிறப்பான தடுப்பு ஆட்டத்தால் கடைசிவரை அது முடியாமல் போனது.
உருகுவே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்
இதன்மூலம் போர்ச்சுகல் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உருகுவே அணி வெற்றிபெற்றது. காலிறுதி சுற்றுக்கு முன்னேறியது. முடிவில், போர்ச்சுக்கல் அணி கேப்டன் ரொனால்டோ கண்ணீருடன் வெளியேறினார்.