குஜராத் அணியின் பந்துவீச்சில் வாணவேடிக்கை காட்டிய சிக்ஸர் நாயகன் சிவம் துபே… ரச்சின் ரவீந்திரா அபாரம்; 206 ரன்கள் குவித்தது சென்னை அணி !!
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்துள்ளது.
17வது ஐபிஎல் தொடரின் 7வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதி வருகின்றன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரச்சின் ரவீந்திரா மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் மிக மிக சிறப்பான துவக்கத்தை அமைத்து கொடுத்தனர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 3 சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் எடுத்து கொடுத்தார். ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை இழந்தபிறகு அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்த ருத்துராஜ் கெய்க்வாட்டும் 46 ரன்கள் எடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
மூன்றாவது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரஹானே 12 ரன்களில் விக்கெட்டை இழந்தாலும், அடுத்ததாக களத்திற்கு வந்த சிக்ஸர் நாயகன் சிவம் துபே குஜராத் அணியின் பந்துவீச்சை சிதறடித்து 23 பந்துகளில் 5 சிக்ஸர் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 51 ரன்கள் எடுத்து கொடுத்துவிட்டு விக்கெட்டை இழந்தார்.
குறை சொல்ல முடியாத அளவிற்கு விளையாடிய டேரியல் மிட்செல் 24 ரன்களும், முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து தனது ஐபிஎல் பயணத்தை துவங்கிய சமீர் ரிஸ்வி 6 பந்துகளில் 16 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 206 ரன்கள் குவித்துள்ளது.