சாம்பியன்ஸ் டிராபி 2017: இலங்கை கேப்டன் உபுல் தரங்காவுக்கு இரண்டு போட்டிகளில் விளையாட தடை

லண்டன்: கூடுதல் நேரம் பந்து வீசிய காரணத்திற்காக, இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக கேப்டன் உபுல் தரங்கா, 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பங்கேற்றுள்ளன.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில், தென்னாப்ரிக்கா, இலங்கை அணிகள் மோதின. ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில், தென்னாப்ரிக்கா அணி, 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஆனால், இலங்கை வீரர்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் பந்து வீசாமல், கூடுதல் கால தாமதம் ஏற்படுத்தியதாக, இதன்போது குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி ஐசிசி விசாரணை நடத்தியது.

ஐசிசி கிரிக்கெட் விதிமுறைகளின்படி, நிர்ணயித்த நேரத்தைவிட கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டு பந்து வீசினால், சம்பந்தப்பட்ட வீரர்கள் அல்லது அணியின் கேப்டன்களுக்கு கணிசமான தொகை அபராதமும், போட்டிகளில் விளையாட சஸ்பெண்ட் விதிக்கப்படுவதும் வழக்கம்.

இதன்படி, தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் பந்து வீச தாமதித்த காரணத்திற்காக, இலங்கை கேப்டன் உபுல் தாரங்கா, அடுத்த 2 போட்டிகளில் விளையாடுவதில் இருந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வரும் 8ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியிலும்,12ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியிலும் அவர் விளையாட மாட்டார். மேலும், இலங்கை வீரர்கள் அனைவருக்கும், பந்து வீச தாமதம் செய்ததற்காக, சம்பள தொகையில் 60% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Silambarasan Kv: Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

This website uses cookies.