முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது.
மலேசியாவில் 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருக்கும் நடப்பு சாம்பியனான இந்தியா, நேபாளத்தை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த நேபாளம் 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் சேர்த்தது. பின்னர் 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா, நேபாளத்தின் அபார பந்து வீச்சால் 48.1 ஓவரில் 166 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் நேபாளர் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
நேபாள அணியின் திபேந்திர சிங் 88 ரன்கள் அடித்ததுடன், 39 ரன்கள் விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார். இந்திய அணியில் ஹிமான்ஷூ ராணா 46 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன் நேபாளம் எந்த வகையான கிரிக்கெட்டிலும் இந்தியாவை வென்றது கிடையாது.
இந்த வெற்றியின் மூலம் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதனால் நேபாள அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. நேபாள பிரதமர் தனது வாழ்த்துக்களை அணிக்கு தெரிவித்துள்ளார். இதற்கு முன் இந்தியாவை எதிர்த்து நேபாளம் இரண்டுமுறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பையிலும், மூன்று முறை 19 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பையிலும் விளையாடியுள்ளது.
முதன்முறையாக இந்தியாவை தோற்கடித்த நேபாள அணிக்கு பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இதனால் நேபாள அணி சந்தோசம் அடைந்துள்ளது.
இந்த வெற்றியை நேபாள அணி மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகிறது. இந்த வெற்றிக்குப் பிறகு இந்திய அணி பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எங்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் என நேபாள அணி பயிற்சியாளர் பினோத் குமார் தாஸ் தெரிவித்துள்ளார்.
நேபாள பயிற்சியாளர் பினோத் குமார் தாஸ் கூறுகையில் ‘‘டிராவிட் மிகவும் பெருதன்மையுடையவர். எங்களுக்கு வாழ்த்துக்கள் கூறிய அவர், நாங்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள், எந்த அணியையும் வெற்றி கொள்ள முடியும் என்றார். இந்த தொடரில் மற்ற அணிகளை விட சிறப்பாக விளையாடியதாக கூறினார்.
எங்களுடைய ஆட்டத்திறமையை பாராட்டியதால் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எங்களுக்கு ஆதரவாக இருந்தது த்ரில்லாக இருந்தது. இந்தியாவை முதன்முறையாக வீ்ழ்த்தியதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். வலுவான இந்தியாவை வீழ்த்தியது எங்களுக்க மிகப்பெரிய வெற்றி’’ என்றார்.