சேத்தன் சர்மா தலைமையிலான இந்திய அணியின் தேர்வு குழுவை மொத்தமாக நீக்கியது இந்திய கிரிக்கெட் கவுன்சில்.
டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி செமி-பைனல் வரை சென்று படுதோல்வியை சந்தித்து வெளியேறியது. இதனால் ரோகித் சர்மா மீதும் இந்திய தலைமை தேர்வுக்குழு மீதும் பிசிசிஐ கடும் அதிர்ச்சியில் இருக்கிறது. இதை வெளிப்படுத்தும் விதமாக இந்திய அணியின் தலைமை தேர்வு குழு தலைவர் சேத்தன் சர்மா மற்றும் இவரது மொத்த குழுவையும் அதிரடியாக நீக்கி இருக்கிறது.
புதிய தலைவருக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது என்றும் பிசிசிஐ அறிவித்திருக்கிறது. புதிய தேர்வு குழுவிற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பிசிசிஐக்கு விண்ணப்பம் அனுப்பலாம். இதற்கு கடைசி நாள் வருகிற நவம்பர் 28ஆம் தேதி என்று அறிக்கை வெளியிடப்பட்டது.
அக்டோபர் மாதம் மும்பையில் நடைபெற்ற வருடாந்திர பொதுக்குழு கூட்டத்தில் பிசிசிஐ பொதுச் செயலாளர் ஜே ஷா பல்வேறு முடிவுகளை தெரிவித்திருக்கிறார். அதில் ஒன்றாக தற்போது இருக்கும் சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வு குழு உலகக் கோப்பை முடிந்தவுடன் நீக்கப்படும் அத்துடன் புதிய ஆலோசனை குழுவும் நியமிக்கப்படும் என்றார்.
நியூசிலாந்து டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிவுற்ற பிறகு, இந்திய அணி வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது இதற்கான அணியை தேர்வு செய்ததோடு சேத்தன் சர்மா குழுவினரின் பதவிக்காலம் முடிவடைந்து விடும் என்றும் ஜே ஷா தெரிவித்தார்.
புதிதாக நியமிக்கப்படும் ஆலோசனைக் குழு ஒவ்வொரு வருடமும் வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பதை பற்றிய ரிப்போர்ட்டை பிசிசிஐக்கு அளிக்க வேண்டும். அதைப் பொறுத்து அடுத்த வருடத்திற்கான வீரர்கள் ஒப்பந்தம் மற்றும் புதிய வீரர்கள் சேர்ப்பு ஆகியவை நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
சேத்தன் சர்மா தலைமையிலான தேர்வுக்குழு தான் விராட் கோலியை கேப்டன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்ற அழுத்தமும் கொடுத்தது. மேலும் தனித்தனி கேப்டன்கள் இருக்கக்கூடாது. மூன்று வித போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் தான் இருக்க வேண்டும். அதுதான் அணியின் எதிர்காலத்திற்கும் அணிக்குள் நிலவும் சண்டை சச்சரவை குறைப்பதற்கும் உதவும் என்றும் இவர் தலைமையிலான குழு தான் பரிந்துரைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.